27. வாக் சக்தி.
தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முகம் சர்மா.
தமிழில்: ராஜி ரகுநாதன்.
“நிர்துரர்மன்ய ஊர்ஜா மதுமதீ வாக்” -அதர்வணவேதம்.
“நம் பேச்சு சக்தியோடு கூடியதாக, மதுரமாக, துஷ்ட சுபாவம் இல்லாமல் இருக்க வேண்டும்!”
இங்கு பிரதானமாக மூன்று குணங்களை கூறியுள்ளார்கள். சொல் சக்தி உடையதாக இருக்க வேண்டும். அதாவது நம் பேச்சு எடுபடவேண்டும். கூறிய சொல் உடனே பயனளித்தால் அது சக்தியோடு கூடிய சொல். இது ஒரு தலைமைப் பண்பு. நம் பேச்சு பிறர்மேல் தாக்கம் ஏற்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும்.
அடுத்து, இனிமையாகப் பேசவேண்டும். நாம் பேசினால் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும் என்று பிறருக்குத் தோன்ற வேண்டும். செவிக்கு இனிமையாகப் பேசவேண்டும்.
ஊர்ஜா, மதுமதீ இவற்றோடு கூட ‘நிர்துரர்மன்ய‘ என்றார்கள். பேச்சில் தீயகுணம் இருக்கக்கூடாது. சிலர் வெளியில் இனிமையாகப் பேசுவது போல் தோற்றமளிப்பார்கள். ஆனால் உள்ளே குத்திக் காட்டுவது போல் இருக்கும். அது வெளிப்பட்டுவிடும். அவ்வாறு இன்றி மனதில் கள்ளமின்றி பேசவேண்டும். பேசுபவரின் மனமும் கேட்பவரின் மனமும் சமரசத்தோடு விளங்கவேண்டும்.
ருஷிகளின் வாக்குகளை நாம் மனனம் செய்தால், நம் சொல் சீர்திருத்தம் பெறும். உள்ளம் தூய்மையடையும். தூய்மையான உள்ளத்தில் ஞானம் தெளிவடையும். சுயநலச் சிந்தனை குறையும். மனம் விசாலமடையும். அவையெல்லாம் சொல்லில் வெளிப்படும். எப்படிப்பட்ட சொல் பேச வேண்டும் என்பது குறித்து வேதத்தில் பல இடங்களில் கூறப்பட்டுள்ளது.
படைப்பில் சமமானவர்கள் இடையே நட்பு ஏற்படுகிறது. சமமான அறிவும், சமமான நியமமும் கொண்டு கவனமாக சொற்களை பேசுவோம் என்பது சங்கல்பம். அபிப்பிராய பேதங்கள் இருக்கலாம். ஆனால் ஒருவர் நலனை அடுத்தவர் விரும்புபவராக இருந்தால் அது சமத்துவம் எனப்படும். சமத்துவம் ஏற்பட்டால் கட்டாயம் அடுத்தவரைப் புரிந்து கொள்ள முடியும். அப்போது மன்னிக்கும் குணம் கூட ஏற்படும். அதன் மூலம் சொற்களில் பாதுகாப்பு கிடைக்கும்.
அதனால்தான் பிறரோடு நாம் பேசும் பேச்சு நிச்சயம் அவருக்கு நலன் பயப்பதாக இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. அனுமனின் சொற்களைக் கேட்ட இராமபிரான், “லட்சுமணா! இவருடைய பேச்சைக் கேட்டாயா? ஒவ்வொரு சொல்லும் நட்போடு கூடியதாய் உள்ளது” என்று கூறி வியக்கிறான். அதற்கு முன் ராமனுக்கும் அனுமனுக்கும் பரிச்சயம் கிடையாது. அந்த முதல் அறிமுக வாக்கியத்திலேயே சினேக பாவனை மிளிர்ந்தது. நட்போடு உரையாடுவது என்பது ஒரு நல்ல பண்பு.
“ப்ரியவாக்ய ப்ரதானேன சர்வே துஷ்யத்நி ஜந்தவ:
தஸ்மாத் ததேவ வக்தவ்யம் வசனே கா தரித்ரதா” – என்கிறார் சுபாஷிதக்காரர்.
“பிரியமாகப் பேசினால் அனைவரும் மகிழ்ச்சி அடைவர் அல்லவா! அதற்கு ஏதாவது செலவாகுமா என்ன? இனிய சொற்களுக்குக் கூடவா தரித்திரம்? ஹாய்யாக பேசுவோமே!” என்கிறார்.
துஷ்ட பிரபாவம் இல்லாததாய், ஸ்னேகத்தோடு கூடியதாய், இனிமையானதாய் சக்தியோடு கூடியதான சொற்களே உண்மையான வாக்கு. அப்படிப்பட்ட வாக்கினைப் பேசும் பண்பாட்டினை கடவுள் நமக்கு அருளட்டும்!