திருப்புகழில் காணப்படும் கதைகள் பகுதி 9
-முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன் –
முத்தைத்தரு பத்தித் திருநகை
முத்தைத்தரு பத்தித் திருநகை என்ற திருப்புகழ் எனக்கு மிகவும் பிடித்த திருப்புகழே. எனக்கு மட்டுமல்ல… வயது பேதம் இல்லாமல் அனைவருக்கும் பிடித்த திருப்புகழ்.
திருப்புகழின் ஆறாவது பாடல் இது. நாள் தோறும் பொருள் உணர்ந்து சொல் பிறழாது பாடி வந்தால், முருகன் அருள் கிடைப்பது மட்டுமல்ல… தமிழை அழுத்தம் திருத்தமாக பேசவும், தமிழில் பிழையற எழுதவும் மிகப் பெரிதாய் உதவும்.
முதலில் பாடலை முழுமையாகப் பார்க்கலாம்…
முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்
முக்கட்பர மற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரும்
முப்பத்துமு வர்க்கத் தமரரும் அடிபேணப்
பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக் கிரிமத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாகப்
பத்தற்கிர தத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வது மொருநாளே
தித்தித்தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்கந டிக்கக் கழுகொடு கழுதாட
திக்குப்பரி அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக எனவோதக்
கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப்புதை புக்குப் பிடியென முதுகூகை
கொட்புற்றெழ நட்பற் றவுணரை
வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
குத்துப்பட ஒத்துப் பொரவல பெருமாளே.
திருப்புகழைப் படைத்த அருணகிரிநாதர் திருவண்ணாமலையில் பிறந்தவர். இவர் கி.பி 1450ல் பிரபுடதேவ மகாராஜா ஆட்சிக் காலத்தில் வாழ்ந்தவர் என்பது ஆராய்ச்சியாளர்களின் முடிவு. காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்துவந்த தவயோகியான திருவெண்காடருக்கும், முத்தம்மைக்கும் பிறந்தவர் இவர்.
இவருடைய மூத்த சகோதரி, ஆதிலட்சுமி. சின்னஞ்சிறு வயதிலேயே தாய் என்ற உறவு இருவரையும் விட்டு விலகியது. ஆதிலட்சுமிதான் அருணகிரிநாதரை வளர்த்தாள். அருணகிரிநாதர் இளமையிலேயே தமிழ் இலக்கியங்கள் அனைத்தையும் கற்றார். ஆனால் அதிகச் செல்லம் கொடுத்து வளர்க்கப்படும் குழந்தைகள் வீணாய்ப் போவதும் எங்கும் உள்ளதுதானே? அருணகிரி வீணாய்த்தான் போனான்.
அருணகிரி வாழ்வில் நடந்த சில முக்கிய நிகழ்வுகளை… நாளை !