திருப்புகழ் கதைகள் பகுதி 70
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
அனைவரும் மருண்டு – திருச்செந்தூர்
தொழுநோய் அறிவியல் செய்திகள் – பகுதி 2
லேப்ரோமடோஸ் : தொழுநோயின் தீவிர நிலையை இந்த வகை தொழு நோய் வெளிப்படுத்தும். சருமத்தில் பரவலாக கட்டிகளும் தடிப்புகளும் தோன்றும். தசைகள் வலிமை இழந்து, மரத்துப்போன நிலை உண்டாகும். மூக்கு, சிறுநீரகம் மற்றும் ஆண்களின் இனப்பெருக்க உறுப்புகள் கூட பாதிக்கப்படலாம். மேலே கூறிய ட்யுபர்குலைடு தொழு நோய் வகையைக் காட்டிலும் தொற்றும் வாய்ப்பு இந்த வகை தொழுநோய்க்கு அதிகம் உண்டு.
தொழுநோய் எவ்வாறு கண்டறியப்படுகிறது?
ஐயம் உண்டாக்கும் விதத்தில் உங்களுக்கு சருமத்தில் புண் ஏற்பட்டால், உங்கள் மருத்துவர் புண் பாதிக்கப்பட்ட சருமதின் சிறு பகுதியை எடுத்து ஆய்வக பரிசோதனைக்காக அனுப்புவார். இதனை ஸ்கின் பயோப்சி என்னும் திசுச் சோதனை என்று கூறுவர். ஸ்மியர் டெஸ்ட் என்னும் பரிசோதனையும் செய்யப்படும். ட்யுபர்குலைடு வகை தொழுநோயில் கிருமிகளைக் கண்டறிய முடியாது. இதற்கு மாற்றாக, லேப்ரோமடோஸ் வக்பை தொழுநோயில் ஸ்மியர் பரிசோதனை மூலமாக கிருமிகளைக் கண்டுக் கொள்ள முடியும்.
சிகிச்சை எவ்வாறு அளிக்கப்படுகிறது?
தொழு நோய் என்பது குணப்படுத்தக் கூடிய ஒரு நோயாகும். கடந்த 20 ஆண்டுகளில் 16 மில்லியன் மக்கள் தொழுநோயிலிருந்து மீண்டு வந்துள்ளனர். தொழுநோய் உள்ள நோயாளிகளுக்கு உலக சுகாதார நிறுவனம் இலவச சிகிச்சை வழங்குகிறது. தொழுநோயின் வகைக்கு ஏற்ப சிகிச்சை மாறுபடுகிறது.
தொற்று பாதிப்பைப் போக்க நுண்ணுயிர்கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நுண்ணுயிர்கொல்லி மருந்துகள் நீண்ட கால சிகிச்சைக்கு அதாவது குறைந்தது ஆறு மாத காலம் முதல் ஒரு வருட காலம் வரை பரிந்துரைக்கப்படுகின்றன.
நரம்பு சேதங்கள்:
தொழு நோயின் தீவிர நிலையில் உள்ளவர்கள் நீண்ட நாட்கள் நுண்ணுயிர்கொல்லி மருந்துகளை எடுத்துக் கொள்வது அவசியம். ஆனால் நுண்ணுயிர்கொல்லி மருந்துகள் நரம்பு சேதங்களை சரி செய்வது இல்லை. நரம்பு வலியை கட்டுப்படுத்தவும், சேதங்களை சரி செய்யவும் அழற்சி எதிர்ப்பு மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.
இவற்றில் ப்ரெட்னிசோன் போன்ற ஸ்டீராய்டுகளும் அடக்கம். தலிடோமைடு என்னும் மருந்து உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை ஒடுக்கும் வலிமை பெற்றது. இந்த மருந்து தொழுநோய் பாதிக்கப்பட்ட சரும கணுக்களுக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது.
இந்த தலிடோமைடு மருந்து அபாயத்தை விளைவிக்கும் பிறப்புக் குறைபாடுகளை ஏற்படுத்தும் தன்மை கொண்டது என்பதால் கர்ப்பிணிகள் அல்லது கர்ப்பத்திற்கு தயாராகும் பெண்கள் இதனைப் பயன்படுத்தக்கூடாது,
தொழுநோய் சிக்கல்கள் :
தொழு நோய்க்கான சிகிச்சை அளிக்கப்படாமல் இருந்தால், நிரந்தரமாக உங்கள் சருமம், நரம்புகள், கை, கால்கள், பாதம் மற்றும் கண்கள் பாதிக்கப்படக்கூடும். கண்பார்வை இழப்பு ஏற்படக்கூடும். முகம் சிதைந்துபோகலாம்.
ஆண்களுக்கு இனப்பெருக்க உறுப்பில் பாதிப்பு, சிறுநீரக செயலிழப்பு ஏற்படலாம். தசைகள் பலவீனம் காரணமாக கைகள் சூம்பிப் போவது, கால்களில் திடம் இல்லாமல் போவது போன்றவை ஏற்படலாம். மூக்கின் உட்பகுதியில் நிரந்தர பாதிப்பு, இதன் காரணமாக மூக்கில் இரதம் வடிதல் ஏற்படலாம்.
மூளைக்கு வெளிப்புறம் உள்ள நரம்புகள் சேதமடைவது, முதுகுத்தண்டு நரம்புகள் சேதம் அடைவது, கை, கால்கள், பாத நரம்புகள் சேதம் அடைவது. நரம்புகளில் சேதம் ஏற்படுவதால், மரத்துப் போன நிலை உண்டாகும் அபாயம் ஏற்படலாம். தொழு நோய் தொடர்பான நரம்பு சேதம் உள்ளவர்களுக்கு கை, கால்கள், பாதம் போன்ற இடங்களில் வெட்டு, எரிச்சல் அல்லது காயம் ஏற்பட்டால் அதனால் உண்டாகும் வலியை அவர்களால் உணர முடியாது.
எனவே தொழுநோய் அறிகுறிகள் இருந்தால் தவறாமல் மருத்துவரை அணுகுங்கள். காலதாமதம் செய்யாதீர்கள். உடனே மருத்துவ சிகிச்சை செய்தால் இந்த நோயிலிருந்து தப்பிக்கலாம். இருபதாண்டுகளுக்கு முன்னர் மத்திய மாநில அரசுகள் சிறப்பு ஏற்பாடுகள் செய்திருந்தன, இப்போது அத்தகைய ஏற்பாடுகள் குறைக்கப்பட்டுள்ளன. இதனை மார்றி அரசுகள் இந்த நோயை ஆரம்பத்திலேயே இனங்காண ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.