― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்திருப்புகழ் கதைகள்: 13 நாள்களில் இரண்டு கிரகணங்கள்!

திருப்புகழ் கதைகள்: 13 நாள்களில் இரண்டு கிரகணங்கள்!

- Advertisement -
thiruppugazh stories

திருப்புகழ்க் கதைகள் – பகுதி 352
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

வரி சேர்ந்திடு – திருவேங்கடம்
13 நாள்களில் இரண்டு கிரகணங்கள் – பகுதி1

     மகாபாரதம் நடந்த வரலாறா இல்லை வெறும் கதையா? ஸ்ரீகிருஷ்ணர் உண்மையில் வாழ்ந்தாரா? போன்ற கேள்விகள் பலரால் எழுப்பப்படுகின்றன. குருக்ஷேத்திர போர் ஒருவகையில் இந்தக் கேள்விகளுக்கு விடையளிக்கிறது. பகவான் ஸ்ரீகிருஷ்ணரைப் புகழும் வகையில் சில நிகழ்ச்சிகள் சிலரால் சித்தரிக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, அமாவாசை அன்று யுத்தம் தொடங்கலாம் என சகாதேவன் துரியோதனனுக்குச் சொன்னான். ஆனால் ஸ்ரீகிருஷ்ணன் அமாவாசைக்கு ஒரு நாள் முன்னதாக தர்ப்பணம் செய்தார்; எனவே துரியோதனன் அன்றுதான் அமாவாசை என நினைத்து களப்பலி கொடுத்து போரைத் தொடங்கினான். இது ஒரு கதை.

     மற்றொரு கதை ஜயத்ரதனை கொல்வதற்காக ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா சூரியனைத் தனது சக்ராயுதத்தால் மறைத்தார் என்ற கதை. ஆனால் அன்றைய தினம், அதாவாது குருக்ஷேத்திரப்போரின் 13ஆம் நாள் மாலை நேரத்தில் ஒரு முழுச் சூரிய கிரகணம் நடந்தது. அந்த சமயத்தில் சனி கிரகம் எங்கிருந்தது; அதுபோல குரு, செவ்வாய், சுக்ரன் ஆகிய கிரகங்கள் எங்கிருந்தன என்பதை வியாசர் தனது மகாபாரதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். அதோடு பதிமூன்று நாள்கள் இடைவெளியில் இரண்டு கிரகணங்கள் நடந்திருக்கின்றன என்றும் தெரிவித்திருக்கிறார்.

     பௌர்ணமியில் சந்திர கிரகணம், அமாவாசையில் சூரிய கிரகணம் நடக்கும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். பௌர்ணமிக்கும் அமாவாசைக்கும் இடயில் 15 நாள்கள் வரும் என்பதையும் நாம் அறிவோம். பின் எப்படி 13 நாள்களில் இரண்டு கிரகணங்கள்?

     பூமி ஒரு நீள்வட்டப் பாதையில் சூரியனைச் சுற்றுகிறது. பூமி சூரியனைச் சுற்றும் அதே பாதையில் சந்திரனும் பூமியைச் சுற்றி வந்தால் இரண்டின் சுற்றுப் பாதைகளும் ஒரே தளத்தில் அமைந்திருக்கும். அந்த மாதிரியான நிலையில் ஒவ்வொரு அமாவாசையிலும் சூரிய கிரகணமும், ஒவ்வொரு பௌர்ணமியிலும் சந்திர கிரகணமும் நிகழும். காரணம் பூமி, சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே அச்சில் நேராக அமையும் போது கிரகணம் நிகழ்கிறது.

     பூமியின் சுற்றுப்பாதையும், சந்திரனின் சுற்றுப்பாதையும் நீள்வட்டமாக உள்ளன. மேலும் சந்திரனின் சுற்றுப்பாதை 5.1 டிகிரி புவியின் சுற்றுப்பாதைக்குச் சாய்வாக அமைந்துள்ளது. ஆகவே கிரகணத்தளமும், சந்திரனின் சுற்றுத் தளமும் ஒன்றாக இல்லை. இதனால் இம் மூன்றும் ஒர் அச்சில் நேராக அமைவது 34.5 நாட்கள் இடைவெளிக்குள் மட்டுமே நிகழ இயலும். இதையே கிரகணப் பருவம் என்கிறோம். கிரகணப் பருவங்கள் (Eclipse seasons) என்பவை வானில் திரும்பத் திரும்ப நிகழும் சுழற்சிகளில் ஒன்றாகும். கிரகணப்பருவங்கள் ஆறு நாள்காட்டி மாதங்களுக்குச் (Calendar months) சற்றுக் குறைவாக 173.3 நாள்கள் சுழற்சிகளில் மீண்டும் மீண்டும் நிகழ்கின்றன.   எனவே பெரும்பாலான நேரங்களில் புது நிலவு (New moon) அதாவது அமாவாசை அல்லது முழு நிலவு (Full Moon) அதாவது பௌர்ணமி கிரகணம் நிகழும் கிரகணப் பாதைக்கு (Ecliptic path) வெகுதூரம் வடக்கே அல்லது தெற்கே விலகி நகர்ந்திருக்கும்.

     எடுத்துக்காட்டாக, கடந்த 2020ஆம் ஆண்டில், நமக்கு 12 அமாவாசைகள் மற்றும் 13 பௌர்ணமிகள் இருந்தன. இருப்பினும் 2 சூரிய கிரகணங்கள் மற்றும் 4 சந்திர கிரகணங்கள் மட்டுமே நிகழ்ந்தன. இதனை எளிதாக விளங்கிக் கொள்ள கிரகணப் பருவங்களை நாம் முதலில் புரிந்து கொள்வோம்.  கிரகணப் பருவங்களைக் (Eclipse seasons) குறித்து அறிந்து கொள்ளத் தேவையான சொற்களில் முக்கியமானவை கிரகணப் பாதை (Ecliptic path), கிரகணத் தளம் (Ecliptic plane) மற்றும் சந்திரக் கணுக்கள் (Lunar nodes) என்பவை.

     கிரகணப்பாதை என்பது சூரியனைச் சுற்றிவரும் பூமியின் சுற்றுப்பாதை.  கிரகணத் தளம் என்பது சூரியனைச் சுற்றிவரும் பூமியின் சுற்றுப்பாதை அமையும் தளம். அல்லது புவியின் பார்வையில் வானில் சூரியன் செல்லும் பாதையின் தளம். ஒவ்வொரு மாதமும் இரண்டு முறை, சந்திரன் பூமியைத் தனது சுற்றுப்பாதையில் வட்டமிடுகையில், பூமியின் சுற்றுப்பாதைத் தளத்தைச் சந்திரக் கணுக்கள் (Lunar nodes) எனப்படும் புள்ளிகளில் கடக்கிறது. அதாவது பூமியின் சுற்றுப்பாதைத் தளத்தை, சந்திரனின் மாதாந்திர சுற்றுப்பாதை இரு இடங்களில் வெட்டும். இந்த வெட்டுமிடங்களே சந்திரக் கணுக்கள் (Lunar nodes) என்பவை. இவ்விரு வெட்டுப் புள்ளிகளையும் இணைக்கும் நேர்கோடு கணுக்கோடு (Line of nodes) என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கணுக்கோடு சூரியனுக்கு நேராக அமையும் போது கிரகணம் ஏற்படும்.

     சரி இதற்கும் மகாபாரதத்திற்கும் என்ன சம்பந்தம்? நாளை காணலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version