spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்ஆளவந்தாரும் மணக்கால் நம்பியும்; தூதுவளைக் கீரையும் அரங்கன் ஆலய நிர்வாகமும்!

ஆளவந்தாரும் மணக்கால் நம்பியும்; தூதுவளைக் கீரையும் அரங்கன் ஆலய நிர்வாகமும்!

- Advertisement -
swami alavanthar

ஆளவந்தாரும் ,மணக்கால் நம்பியும் ,தூதுவளைக் கீரையும் ,அரங்கன் ஆலய நிர்வாகமும் …

ஆளவந்தார் வரலாறு …

ஆளவந்தார் கிபி 976 ஆம் ஆண்டு ஆடி மாதம் உத்தராடம் கூடிய வெள்ளிக்கிழமையில் வீரநாராயணபுரத்தில் அவதரித்தார். நாதமுனிகளின் பேரன். ( நாதமுனிகளின் குமாரர் ஈஸ்வர முனியின் பிள்ளை )

நாதமுனிகள் வடநாட்டில் பெருமாளுக்கு கைங்கரியம் செய்து வந்த பெருமாளின் பெயரான ‘யமுனைத் துறைவன்” என்ற பெயரை அவருக்கு மணக்கால் நம்பி சூட்டினார்.

(உய்யக்கொண்டார் (திருவெள்ளறையில் பிறந்தவர்) நாதமுனிகளின் சீடராக இருந்தவர். நாதமுனிகள், தன் மகன் ஈசுவரமுனிக்குப் பிறக்கும் குழந்தைக்கு யமுனைத்துறைவன் எனப் பெயர் சூட்டி அருளுரை புகட்டுமாறு உய்யக்கொண்டாரை வேண்டிக்கொண்டார். உய்யக்கொண்டார் தன் இறுதிக்காலத்தில் தனது சீடரான மணக்கால் நம்பியிடம் அப்பணியை ஒப்படைத்தார் ( நம்பி லால்குடி பக்கம் இருக்கும் மணக்கால் என்ற ஊரில் பிறந்தவர்))

srirangam perumal

சிறுவயதில் சந்தை சொல்ல (பலருடன் பிரபந்தம் சேவிக்க(சொல்ல) பயிற்றுவிப்பது தான் சந்தை) யமுனைத்துறைவனை அனுப்பிய போது, முதல் நாள் சென்று சேவித்துவிட்டு மறுநாள் போன போது முதல் நாள் சொன்னதையே மீண்டும் சந்தையில் சொல்லுகிறார்கள் என்று வீடு திரும்பியவர் அவர்!

தந்தை ஆசார்யரின் திருவடி அடைந்த பின், மஹாபாஷ்யபட்டர் என்பவரிடன் இவர் சாஸ்திரப் பாடம் கற்றுக்கொண்டு வந்த காலத்தில், சோழ மன்னனின் ஆஸ்தான வித்வானாக இருந்த ஆக்கியாழ்வான் என்னும் பண்டிதன் அந்நாட்டில் உள்ள வித்வான்களை வென்று அவர்களிடம் கப்பம் வாங்கி வந்தான்.

ஒரு நாள் யமுனைத் துறைவருடைய ஆசிரியரான மாஹாபாஷ்ய பட்டருக்கு கப்பம் கேட்டு ஓலை அனுப்ப, பட்டர் திகைத்து நின்றார். அந்த சமயத்தில் யமுனைத்துறைவர் அந்த ஓலையை கிழித்து எறிந்தார்.

இதை கேள்விப்பட்ட அரசன் யமுனைத்துறைவரை அரண்மனைக்கு வருமாறு ஓலை அனுப்ப அந்த ஓலையும் கிழித்துவிட, அரசன் ’இவர் சாமான்யரல்லர்’ என்று அறிந்து இவர் வருவதற்கு பல்லக்கை அனுப்பி உரிய மரியாதைகளுடன் அரசவைக்கு வரவழைத்தான்.

அரச சபையில் பல பண்டிதர்கள் முன்னிலையில் ஆக்கியாழ்வானுக்கும் யமுனைத்துறைவருக்கும் வாதப் போர் தொடங்கியது. வாதத்தின் ஆரம்பத்தில் ஆக்கியாழ்வான் யமுனைத் துறைவரை “இவர் சிறுபிள்ளைதானே” என்று நினைத்து சாஸ்திர விவாதம் இல்லாமல் உலகியல் விஷயங்களிலேயே தோற்கடித்துவிடலாம் என்று எண்ணி ”நீர் உண்டு என்பதை நான் இல்லை என்று மறுத்து பேசுவேன்”. போட்டியில் வென்றவர் தோற்றவர் தலையில் அடிக்க வேண்டும்” என்றார்.

alavanthar

இதை கவனித்துக்கொண்டு இருந்த அரசனும் அரசியும் தங்களுக்குள் சபதம் செய்து கொண்டார்கள். மன்னன் யமுனைத்துறைவர் தோற்றுவிடுவார், அப்படி அவர் ஜெயித்தால் தன் ராஜ்ஜியத்தில் பாதியை அவருக்கு தந்துவிடுவதாக சொன்னார். அரசியோ ”யமுனைத்துறைவர் வென்றுவிடுவார், அப்படி தோற்றால் நான் அரசி பதவியைத் துறந்து உமக்கு பணிப்பெண்ணாவேன்” என்றாள்.

போட்டி ஆரம்பித்தது, யமுனைத்துறைவர் மூன்று வாக்கியங்களை கூறினார்

  1. உன் தாய் மலடியல்ல
  2. மன்னன் சார்வபௌமன் ( சக்கரவர்த்தி )
  3. அரசி கற்புக்கரசி

ஆக்கியாழ்வான் இதை மறுத்து பேச முடியாமல் மௌனமாக இருக்க தோல்வியை ஒப்புக் கொண்டார். யமுனைத்துறைவர் ஆக்கியாழ்வான் மூத்தவராக இருப்பதால் தலையில் அடிக்க மறுத்துவிட்டார்.

“நீர் சொன்ன மூன்று வாக்கியங்களையும் உம்மால் மறுத்து பேச முடியுமா?” என்று ஆக்கியாழ்வான் கேட்க

யமுனைத் துறைவர் பின்வருமாறு விளக்கம் அளித்தார்.

  1. ’தாய் மலடியல்ல’ என்பதற்கு “ஒற்றை மரம் தோப்பு ஆகாது” என்பது போல, ஒரே ஒரு பிள்ளையைப் பெற்றவளை பல பிள்ளைகளைப் பெற்றவளுடன் ஒப்பு நோக்க முடியாது. ஆகையால் ஒரே ஒரு பிள்ளை பெற்ற தாயும் மலடியே.
  2. ’மன்னன் ஸார்வபௌமன்’ என்பதற்கு “ஸார்வபௌமன் என்றால் பூமிப் பரப்பை எல்லாம் ஆள்பவன் என்று பொருள். ஒரு சிறிதளவு பூமியை (ராஜ்ஜியத்தை) ஆள்பவன் எப்படி ஸார்வபௌமன் ஆவான் ?
  3. ’அரசி கற்புக்கரசி’ என்பதற்கு “பெண் தன் கணவனை அடையும் முன்னரே சாஸ்திரப்படி திருமணம் ஆகும் முன் தேவர்களுக்கு வாழ்க்கைப்படுகிறாள். அதனால் அதையும் மறுக்க முடியும் – என்று கூற யமுனைத்துறைவர் பதிலை கேட்ட அரசன் பாதி ராஜ்ஜியத்தை யமுனைத்துறைவருக்கு வழங்கினான். ராணி மகிழ்ச்சி அடைந்து “என்னை ஆள வந்தீரோ” என்று எடுத்து அணைத்துக் கொண்டார். அன்று முதல் யமுனைத்துறைவருக்கு “ஆளவந்தார்” என்ற திருநாமம் உண்டாயிற்று.

ஆளவந்தார் தனக்கு தரப்பட்ட, ராஜ்ஜியத்தை நிர்வகித்து வந்த காலத்தில், இந்த விஷயங்களை எல்லாம் கேட்டறிந்த மணக்கால் நம்பி, மகிழ்ச்சி அடைந்து, தன் ஆசார்யரின் கட்டளையை,நிறைவேற்றத் தக்க சமயம் என்று எண்ணி, ஆளவந்தாரைக் காண வந்தார்,

ஆனால் அவரால்,அரண்மனைக் காவலை தாண்டி உள்ளே செல்ல முடியவில்லை. அரண்மனை சமையலறையில் பணிபுரிபவர்களின் வாயிலாக, ஆளவந்தார் “தூதுவளைக் கீரையை” விரும்பி உண்பார் என்ற விஷயத்தை விசாரித்து தெரிந்துக்கொண்டு, தினமும் தூதுவளைக் கீரையை கொண்டு வந்து கொடுக்க ஆரம்பித்தார்.

ஆறு மாதம் கடந்த பிறகும்,ஆளவந்தார் இவரைப் பற்றி விசாரிக்காமல் போக, திடீர் என்று நான்கு நாட்கள் கீரை கொடுப்பதை “மணக்கால் நம்பி” நிறுத்தி விட்டார். ஆளவந்தார் ஏன் “நான்கு நாட்களாக ஏன் தூதுவளை கீரை இல்லை?” என்று சமையல் பணியாட்களை விசாரிக்க “ஒரு வயதான பிராமணர் ஆறு மாதங்களாக கொண்டு வந்து கொடுத்துக்கொண்டு இருந்தார், நான்கு நாட்களாக அவர் வரவில்லை” என்று கூறினார்கள். ’அவர் மறுபடி வந்தால் எனக்குத் தெரிவியுங்கள்’ என்று ஆளவந்தார் பணித்தார்.

மறுநாள் நம்பி கீரையை கொண்டு போய் கொடுக்க சமையற்காரர் ஆளவந்தாரிடம் அவரை அழைத்துக்கொண்டு சென்றார்.

ஆளவந்தார் நம்பியை பார்த்து உங்களுக்கு என்ன நிதி வேண்டும் ? என்று கேட்க நம்பி எனக்கு ஒன்றும் வேண்டாம் உங்கள் பாட்டனார் தேடிவைத்த நிதி ஒன்று என்னிடம் இருக்கிறது அதை உம்மிடம் அளிப்பதற்கு இங்கே வந்துவிட்டு போவதை தடை செய்யாமல் இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டார்.

தினமும் நம்பி அரண்மனைக்கு வந்து கீதையின் உட்பொருளை அவருக்கு உபதேசம் செய்ய ஆரம்பித்தவுடன், படிப்படியாக ஆளவந்தாரின் உள்ளம் தினமும் நம்பியின் வரவை நாடத் தொடங்கியது. கீதையின் உட்பொருளில் திளைத்த ஆளவந்தார் “அவனை அடைவதற்கு உபாயம் எது?” என்று கேட்க நம்பியும் சரம ஸ்லோகத்தை உபதேசித்து, “அவனை அடைவதற்கு அவனே உபாயம்” என்று ஆளவந்தாருக்கு ’பரமனே உபேயம், பரமனே உபாயமும்’ என்பதை புரியவைத்தார். பிறகு ஆளவந்தாரை ஸ்ரீரங்கம் அழைத்துச் சென்று பெரியபெருமாளைக் காட்டி “உங்களுடைய பாட்டனார் நாதமுனிகள் தேடிவைத்த நிதி இதுவே” என்றார்.

”நீண்ட அப்பெரியவாய கண்களை”க் கொண்டு பெரியபெருமாள் ஆளவந்தாரை ஆட்கொண்டார். அதன் பிறகு ஆளவந்தார் எல்லாவற்றையும் துறந்து துறவு மேற்கொண்டு ஸ்ரீரங்கத்தையே உறைவிடமாகக் கொண்டு நிர்வாகம் செய்து வந்தார்.

( இன்றும் ஸ்ரீரங்கத்தில் ஆளவந்தார் திருநட்சத்திரத்திரம் அன்று ஆளவந்தாருக்கு தூதுவளைக் கீரை சமர்ப்பிக்கும் வழக்கம் இருந்து வருகிறது. )

ஒரு மானசீக ஆச்சார்யனாக, ஸ்ரீராமானுஜரை வைணவத்துக்கு இட்டு வந்து, பெரும் தொண்டாற்ற வைத்த பெருமை ஆளவந்தாரையே சாரும்.

ஆளவந்தார் பல கிரந்தங்களை அருளியுள்ளார். அவரின் ’ஸ்தோத்திர ரத்னம்’ மிகவும் முக்கியமான ஒன்று. தினமும் வைணவரக்ள் அனுசந்திக்கும் தனியனான

மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதி:
ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம்
ஆத்யஸ்ய ந: குலபதேர் வகுளாபிராமம்
ஸ்ரீமத் ததங்க்ரியுகளம் ப்ரணமாமி மூர்த்நா

என்பது ஸ்தோத்திர ரத்னத்தின் ஒரு பகுதி.

ஆளவந்தார் வைபவம், உடையவர் (ஸ்ரீராமானுஜர்) வைபவத்திலும் அவருடைய முக்கியச் சீடர்களான பெரிய நம்பி, திருக்கோட்டியூர் நம்பி, திருமலை ஆண்டான், பெரிய திருமலை நம்பி, திருவரங்கப்பெருமாள் அரையர், திருக்கச்சி நம்பி, மாறனேரி நம்பி முதலியோர்களின் வைபவங்களிலும் இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe