spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்துன்பம் போக்கும் தோரணமலை முருகன்! தைப்பூசம் சிறப்பு!

துன்பம் போக்கும் தோரணமலை முருகன்! தைப்பூசம் சிறப்பு!

- Advertisement -

பாடம் படிக்க பள்ளிகளையும் பல்கலைக்கழங்களையும் நாடுவது இன்றைய காலம். இதற்கு முன்பு திண்ணையில் பள்ளியில் பாடம் கற்றார்கள். இவைகளில் எல்லாம் நாம் விரும்பிய பாடத்தை மட்டும் பயில கற்று கொடுக்கப்பட்டு வந்தது. அந்த காலத்தில் குருகுலம்தான் பள்ளிக்கூடங்களாக திகழ்ந்தன. ஆனால் ஆதியில் மலையும் மலை சார்ந்த இடங்களும்தான் பாடசாலைகள் அமைவிடமாக விளங்கின. அந்த வகையில் உலகிலேயே முதல் பாடசாலை தொடங்கப்பட்ட இடம் தோரணமலை என்றால் ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா?

உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் திருநெல்வேலி மாவட்டம் கடையம் அருகேதான் இந்த தோரணமலை உள்ளது. இந்த மலையின் உச்சியில் இருக்கும் குகைக் கோயிலில் முருகப்பெருமான் கிழக்குநோக்கி வீற்றிருக்கிறார். இறையருள் வீசும் இந்த மலைப்பகுதி ஒரு காலத்தில் பட்டங்கள் வழங்கும் பாடசாலையாக விளங்கியது என்கிறார் சித்தர் ஆராய்ச்சியாளர் காமராஜ் அவர்கள். ஏதோ கண்மூடித்தனமாக இந்த கருத்தை அவர் சொல்லவில்லை. அதற்கான ஆதாரத்தை சித்தர் பாடல்களில் இருந்தே எடுத்துக் காட்டுகிறார்.

கைலாய மலையில் சிவபெருமானின் திருமணம் நடைபெற்றபோது வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது அல்லவா? அப்போது உலகை சமன் செய்ய தென்திசைநோக்கி சிவபெருமானால் அனுப்பப்பட்டவர்தான் குறுமுனி என்று அழைக்கப்படும் அகத்தியர். தென்திசை புறப்பட்ட அகத்தியருக்கு ஆதி மொழியாம் தமிழ் மொழியை உபதேசித்தார் சிவபெருமான்.

தோரணமலையின் தோற்றம்

தென்தமிழகத்தில் உள்ள பொதிகை மலை வந்ததும் உலகம் சமநிலை அடைந்தது. அதன்பின் அகத்தியர் தமிழ் கடவுளான முருகப்பெருமானிடமும் தமிழை கற்று அகத்தியம் என்ற இலக்கண நூலை எழுதினார். அதனை பின்பற்றிதான் தொல்காப்பியர் இலக்கண நூல் வடித்தார். தற்போது அகத்தியம் கண்ணில் படாமல் போனாலும் அவரது சீடர் தொல்காப்பியரின் படைப்பு தமிழ் இலக்கணத்துக்கு பாடமாக விளங்குகிறது.

தமிழுக்கு இலக்கணம் வகுத்தபின் அகத்தியர் உலக மக்கள் நோயின்றி வாழ மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்டார். மருத்துவம் என்றால் இந்த காலத்தைப்போல உடல்கூறுகளையும் மருந்துகளை மட்டும் படிப்பது அல்ல. இந்த மண் முதல் விண் வரை உலக இயகத்தின் அத்தனையையும் கற்று தேர்ச்சி அடைந்தால்தான் அவன் முழு மருத்துவன் ஆக முடியும். இதற்காக அகத்தியர் மொத்தம் ஒரு லட்சத்து 24 ஆயிரம் கிராந்தங்கள் வகுத்துள்ளார். தான் கண்டறிந்த சித்த மருத்துவ குறிப்புகளை கொண்டு அகத்திய வைத்திய சேகரம் என்ற நூல் படைத்துள்ளார்.

அகத்தியருக்கு பல சீடர்கள் உண்டு. ஒவ்வொருவரையும் வானவியல், வேதியல், மண்ணியல், கணிதவியல், மருத்துவம் என வெவ்வேறு துறையை பற்றி ஆராய்ச்சி செய்ய பணித்தார். அந்த ஆராய்ச்சியின் படி பாடத்திட்டங்களை அகத்தியர் வகுத்தார். அந்த பாடத்திட்டத்தில் தமிழ் மொழி இலக்கிய இலக்கணம் கற்பதே முதல் பாடமாக இருந்தது.

தொடர்ந்து பீச கணிதமும், மருத்துவ ஆய்வு வகைகளும், வானசாஸ்திரங்கள், இருநிலை பிரிவாகம், மலை வாசகம், மூலிகை வாடகம், பாடான வாகடம், மூலிகை மூலாதரத்துவம், இரசாயன ஆய்வு& அதன் அனுபவ பயிற்சி, பாடான சுத்திமுறை, அனுபான முறைகள், களிம்பாக்கம், பற்பம், செந்தூரம், உலோகபற்பம், சங்கு பற்பம், மருத்துவ சிகிச்சை முறைகள், திரிநிலையில் தாவர சமூலங்கள், பாடான பற்பங்கள், தைல லேகிய முறைகள் என்ற வகையில் பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டன. மேலும் சிறப்பு மருத்துவமாக கிருமிநாசினி, நச்சு அகற்றும் முறை, மழலையர் மருத்துவம், இரணவாடகம், உடல்தத்துவம், நார், தசை, தந்தம், குருதி ஆகியவற்றின் ஆய்வு, கபாலம் பற்றிய ஆய்வு, நேந்திரம், நாசி, செவி, கண்டம், சருமநிலை போன்ற படிப்புகளும் உண்டு. இதுதவிர ஆறு ஆதாரநிலைகள், சரியை, கிரியை, ஞானம் என அனைத்து கலைகளும் கற்று கொடுக்கப்படும் என்று ஆராய்ச்சியாளர் காமராஜ் அவர்கள் தெரிவிக்கிறார்.

இப்படி முழுமையான பாடத்திட்டம் வகுத்தப் பின்னர் அகத்தியர் தோரணமலை பகுதியில் பாடசாலையை தொடங்கினார். இதை விளக்கும் பாடல் அகத்திய வைத்திய சேகரத்தில் உள்ளது.
“மாமலரால் திருமாலுடனே வாணி
மலைமகளாம் அம்பிகையாள் நின்ற பாதம்
குஞ்சரமும் ஆறுமுகனை அளித்தான்தனை
ஆலமதில் ஆற்றாதும் போற்றல் செய்து
பொங்குறவே தோரணகிரி ஒட்டி
பயிற்சி முகாம் அதனின் தனமிசை
தெளிவு காண ஆரல்சார் தேயம் ஒட்டி
ஆரம்ப பண்டித சித்த பயிற்சியத்தின்
குருகுல வாசமதின் தோரணத்தின் வரிசைஒட்டி
பயிற்சி பெறும் பாடத் திட்டமிசை
சித்தர்சார் பண்டிதத்தின் தனம் கேள்…”
என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

தோரணமலை பயிற்சி கூடத்தில் சீனா உள்பட உலகின் பல்வேறு இடங்களில் இருந்து பயில சித்தர்கள் பலர் வந்தனர். பின்னர் சிவபெருமான் நடனம் புரிந்த ஐந்து சபைகளில் அதாவது திருவாலங்காடு, சிதம்பரம், மதுரை, திருநெல்வேலி, குற்றாலம் ஆகிய பகுதிகளில் பள்ளிகள் திறக்கப்பட்டன. அங்கு பயின்றவர்கள் மூலம் உலகின் பல்வேறு பகுதிகளில் பாடசாலைகளின் கிளைகள் உருவாக்கப்பட்டன. இதில் இலஞ்சி, மருதமலை, ஆவினன்குடி(பழனி), கொள்ளிமலை, சித்தர்குகை, அவன் அவளாய் நின்ற மலை போன்றவை முக்கியமானதாகும்.

இதை விளக்கும் பாடல் ஒன்று…
“ தோரணகிரி பயிற்சி முகாம் தன்னில்
தொடர்துவாய் ஆங்காங்கே
அவைசார்பாக கூடமெனும்
கனகஅவை தில்லையாக, ரசித அவை
கயல்விழி எல்லை ஒட்டி
தாம்பர அவை காந்திமதி எல்லை
இரத்தின அவை என திருஆலங்காடு
சித்திர அவை கூடமெனு அசலம்சார்
குன்று ஒட்டி வரிசையதாய் கிளை
பலவும் தோரணகிரி இலஞ்சி ஒட்டி
அசலம்சார் குன்றுதனில்
மருதமலை, ஆவினன்குடி, சித்தர்குகை
அவன் அவளாய் நின்ற மலை
கொள்ளிமலை எனபல நிலையில்
தோரணகிரி பயிற்சி முகாம்
என அமைப்பை ஒட்டி
சித்தம் சார் பண்டிதத்தை பயிற்சி
பெற பண்டித பாடத்திட்டம் கேள்…”
இந்த பாடசாலையில் ஆறு ஆறு ஆண்டுகளாக பாடங்கள் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு ஆறு ஆண்டுகளுக்கும் தனித்தனியே பட்டங்கள் வழங்கப்பட்டன.

இந்த காலக்கட்டத்தில்தான் மன்னன் காசிவர்மனுக்கு தீராத தலைவலிக்காக அகத்தியர் கபால அறுவை சிகிச்சை செய்தார். அவருக்கு மிகவும் உதவிகரமாக இருந்த சீடர் தேரையரை மூலிகை ஆராய்ச்சிக்காக பணித்தார். அவரும் தோரணமலையில் தங்கி இருந்து மூலிகைகள் மூலம் மருத்துவ சேவை செய்து வந்தார். அகத்தியரும் தேரையரும் தோரணமலையில் இருக்கும்போது தமிழ் கடவுளாம் முருகனை சிலை வைத்து வணங்கி வந்தனர். அவர் இங்கேயே சமாதி நிலையை அடைந்தார்.

காலப்போக்கில் அங்கு வழிபாடு நின்றுபோனதோடு முருகன் சிலையும் காணாமல் போனது.

ஆயிரமாயிரம் ஆண்டுகள் உருண்டோடிய நிலையில் ஆதிநாராயணன் அவர்கள் மூதாதையர் ஒருவர் கனவில் முருகப்பெருமான் வந்து தான் தோரணமலையில் இருப்பதாகவும் அங்கு சுனையில் மறைந்து கிடக்கும் சிலையை குகையில் நிறுவி வணங்கும்படியும் கூறினார். அதன்படி அவர் அங்கு வந்து சுனையில் மறைந்திருந்த முருகனை மீட்டு குகையில் ஸ்தாபித்து வணங்கி வந்தார்.

ஆரம்ப காலங்களில் மலைமீது அதிக சிரத்தை எடுத்தே ஏறமுடியும். மலை ஏறும்போது இரண்டு பெரிய பாறைகளை கடக்க வேண்டும். அந்த இடங்களில் மட்டும் சிறிய அளவில் படிக்கட்டுகள் செதுக்கி பிடித்து செல்வதற்கு வசதியாக கம்பி அமைக்கப்பட்டது. அவ்வளவு பிரபலம் ஆகாத நிலையில் இருந்த தோரணமலைக்கு அந்த பகுதி மக்கள்தான் அதிக அளவில் சென்று வழிபட்டு வந்தார்கள்.

இந்த நிலையில்தான் 1970 ஆம் ஆண்டு ஆதிநாராயணன் அவர்கள் கோயில் பொறுப்புகளை ஏற்றார். பள்ளிக்கூட ஆசிரியரான அவர் வேலைநேரம் தவிர மற்ற நேரங்களை தோரணமலையிலேயே கழித்தார். கடையம் சுற்றுவட்டாரத்திற்கு மட்டும் தெரிந்த அந்த கோயிலை பிரபல படுத்த எண்ணினார். அதற்கு என்னவழி என்று சிந்தித்தார். அப்போதெல்லாம் மக்களின் முக்கிய பொழுதுபோக்கு சினிமா மட்டுமே. எனவே சினிமா தியேட்டர்களில் தோரணமலை முருகன் பற்றிய சிலேடுகளை போட ஏற்பாடு செய்தார். இதற்காக அவர் தான் வைத்திருந்த சைக்கிளிலேயே பயணம் செய்வார்.

ஒவ்வொரு சினிமா தியேட்டருக்கும் சென்று அதன் உரிமையாளரிடம், “நான் தோரணமலையில் இருந்து வருகிறேன்” என்பார். அதற்கு நன்கொடை ஏதும் வேண்டுமா என்று கேட்டபார்கள். “பணம் ஏதும் வேண்டாம். இந்த தோரணமலை பற்றிய பட காட்சியை(சிலேடு) உங்கள் தியேட்டரின் போட்டால் போதும்” என்று சொல்வார். பணச் செலவு இல்லாத இறைபணியை யார்தான் விரும்ப மாட்டார்கள். மனமகிழ்ச்சியோடு இடைவேளையின் போது தோரணமலையை காட்டினார்கள்.

அப்படித்தான் தோரணமலையில் புகழ் பல்வேறு மாவட்டங்களுக்கு பரவியது. மேலும் அப்போது வைகாசி விசாகத்தை சிறப்பாக கொண்டாட எண்ணினார். சிறப்பு பூஜையோடு நின்றுவிடாமல் விடிய விடிய பக்தர்கள் அங்கேயே தங்கி இருக்க என்ன செய்யலாம் என்று யோசித்தார். அதற்காக த.பி.சொக்கலால் பீடி நிறுவனத்தின் அதிபரை சந்தித்தார். விசாக திருவிழா பற்றி எடுத்துக்கூறினார். அவர்களும் கோயிலுக்கு பணம் ஏதும் வேண்டுமா என்று கேட்டனர். “பணம் வேண்டாம், உங்கள் நிறுவனம் சார்பாக இலவசமாக சினிமா படத்தை காட்டினால் போதும்” என்றார். அவர்களும் மனமகிழ்ச்சியோடு தோரணமலை வந்து விடியவிடிய மூன்று திரைப்படங்களை காட்டினார்கள். கிராமங்களில் திரையரங்குகள் இல்லாத அந்த காலத்தில் இந்த காட்சிகள் பொதுமக்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தது.

வைகாசி விசாகத்திருவிழா மக்கள் வெள்ளத்தில் களைகட்டியது. மேலும் கலை நிகழ்ச்சிகள் நடத்த சொக்கலால் பீடி நிறுவனத்தினர் ஒரு கலையரங்கத்தையும் கட்டி கொடுத்தனர். அந்த மேடையில் கலைநிகழ்ச்சிகளை நடத்தவும் ஏற்பாடு செய்தார். நாடகங்களும் அங்கு அரங்கேறின. கடையம் அருகே உள்ள வள்ளியம்மாள் புரத்தில் உள்ள திருமுருகன் உயர்நிலைப்பள்ளி மாணவ&மாணவிகள் ஆண்டுதோறும் அங்கு வந்து கலைநிகழ்ச்சிகளை நடத்துவார்கள்.

அன்று அந்தப்பள்ளியின் நிர்வாகி நாடாக்கண்ணு அவர்கள் தொடங்கி வைத்த அந்த சேவையை இப்போது அவரது மருமகளும் செய்து வருகிறார்.

இந்த நிலையில் தோரணமலையின் வனப்பை கண்ட சினிமா கலைஞர்கள் அங்கு சினிமா படம் எடுக்க வந்தனர். அவர்களுக்கு ஆதிநாராயணன் அவர்கள் பல்வேறு உதவிகளை செய்து கொடுத்தார். படப்பிடிப்பு முடிந்தவுடன் தங்களுக்கு இடம் கொடுத்து உதவியும் செய்ததற்காக ஒரு கணிசமான தொகையை ஆதிநாராயணனன் அவர்களிடம் கொடுத்தனர்.

ஆனால் அந்தப் பணத்தை வாங்க மறுத்துவிட்டார். மாறாக, எனக்கு நீங்கள் நன்றிக்கடன் செலுத்த வேண்டுமானால் படத்தில் எழுத்துப்போடும் போது தோரணமலை என்ற பெயரை போடும்படி கேட்டுக்ª காண்டார். அதனை புனிதமாக கருதிய படக்குழுவினர் தோரணைமலை என்ற பெயரை படத்தில் சேர்த்தனர்.

மறைந்த இயக்குனர் பரதனின் சாவித்திரி என்ற சினிமாப்படம் (இந்த படத்தில் கதாநாயகியாக நடத்தவர் பிரபல நடிகை கீர்த்திசுரேசின் தாயார் மேனகாதான்) இங்கு அதிக அளவில் படமாக்கப்பட்டது. அந்த படத்தின் வசனத்தில் தோரணமலை என்று குறிப்பிட்டு பேசுவார்கள். அதேபோல் டெலிவிஷன் தொடர்களும் இங்கே படமாக்கப்பட்டன. அதிலும் தோரணமலை பெயர் இடம்பெறும்.

இப்படி தோரணமலையில் பெயர் நாலாபுறமும் பரவியதால் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் பலர் வரத்தொடங்கினர். கிராமவாசிகள் மட்டும் வந்தகாலம் போய் நகரவாசிகளும் வந்த வண்ணம் இருந்தனர். அவர்களால் மலையில் எளிதாக ஏறமுடியவில்லை. அப்போதுதான் ஆதிநாராயணன் அவர்கள் பக்தர்கள் எளிதாக மலைமீது ஏற படிக்கட்டுக்கள் அமைக்க வேண்டும் என்று எண்ணினார்.

இதற்காக பலரை சந்தித்து உதவி கேட்டார். அப்போதும் பணத்தை தாருங்கள் என்று யாரிடமும் கேட்கவில்லை. உங்களால் இயன்ற படிக்கட்டுகளை கட்டித்தாருங்கள் என்றுதான் வேண்டினார். பக்தர்களும் தங்களால் இயன்ற படிக்கட்டுகளை கட்டிக் கொடுத்தனர். இப்படி திருப்பணிக்கு உதவியவர்கள் பலர்.

இந்த நிலையில்தான் ஆவுடையானூர் டாக்டர் முருகனின் அருளால் ஈர்க்கப்பட்டார். அவர் அடிக்கடி தோரணமலைக்கு வருவார். அவரது திருப்பணி மிகவும் மகத்தானது. அவரது முயற்சியால் பல படிக்கட்டுகள் முழுமை அடைந்தன. அதோடு வழியில் உள்ள லட்சுமி தீர்த்தத்தை புதுப்பித்து அங்கே பக்தர்கள் நீராட வசதி செய்து கொடுத்தார். இதற்காக அந்த டாக்டரே தன் தலையில் செங்கற்களை சுமந்த சம்பவங்களும் உண்டு. அதோடு பண உதவி செய்ய இயலாத பாமர ஏழை பக்தர்களும் திருப்பணி செங்கற்களை கொண்டு சென்றனர்.

ஆதிநாராயணன் அவர்கள் இந்த திருப்பணியை தொடங்கி ஐம்பது ஆண்டுகள் ஆகிறது. இந்த வயதிலும் அவருடைய எண்ணங்கள் அனைத்தும் தோரணமலை முருகனையே வலம் வந்து கொண்டிருக்கிறது. மோட்டார் சைக்கிள்களும், கார்களும் பெருகி விட்ட இந்த காலத்திலும் தனது திருப்பணிக்கு உதவிய மிதிவண்டியை அவர் இன்றும் மறக்கவில்லை. இயக்குவார் யாரும் இல்லை என்றாலும் அந்த மிதிவண்டி முருகனின் பெயரை சொல்லும் காட்சி பொருளாக அவரது வீட்டில் நின்று கொண்டிருக்கிறது.

வயது முதுமை காரணமாக ஆதி நாராயணன் அவர்களுக்கு அவரது மூத்த மகன் செண்பகராமன் உதவியாக இருக்கிறார். சென்னை உள்பட முக்கிய நகரங்களில் தோரணமலையின் பெருமையை பறைசாற்றி வருகிறார். அவரது சீரிய முயற்சியின் பேரில் தற்போது தைபூச திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. வள்ளி&தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமானுக்கு (உற்சவர்) திருக்கல்யாணம் நடைபெறுகிறது. மேலும் வீதிஉலாவும் நடத்தப்படுகிறது.

தற்போது கோயில் திருப்பணி தொடங்க உள்ளது. இதில் கற்களால் ஆன புதிய கட்டிடங்கள், அலங்கார தோரணங்கள் இடம் பெறும். பணி நிறைவு அடைந்தவுடன் குடமுழுக்கும் சிறப்பாக நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

இதில் பக்தர்களும் தொழில் அதிபர்களும் உதவி செய்து முருகப்பெருமானின் அருளை பெறலாம். கடந்த காலத்தில் திருப்பணியில் உதவியவர்கள் நல்ல வளர்ச்சி அடைந்து தொடர்ந்து மலைக்குகை நாயகனாம் முருகப்பெருமானை வந்து தரிசனம் செய்த வண்ணம் உள்ளனர். அதேபோல் திருப்பணிக்கு உதவி செழுமையாய் வாழ முருகப்பெருமான் அருள் புரிவார்.

(தொடர்புக்கு& செண்பகராமன், கைபேசி எண் 9965762002)

  • கடையம் பாலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe