spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்ருஷி வாக்கியம் (8) – பக்தியில்லாமல் யோகமில்லை!

ருஷி வாக்கியம் (8) – பக்தியில்லாமல் யோகமில்லை!

- Advertisement -

samavedam pic e1528682651403

சாஸ்திரங்களில் பக்தியின் வைபவமும், முக்கியத்துவமும் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளன. பக்தி யோகம் அனைத்து யோகங்களிலும் உள்ளூடாக உள்ளது. பக்தி இருந்தால்தான் மீதி உள்ள யோகங்களும் பலன் தரும். பக்தியும் சரணாகதியும் இருந்தால்தான் யோகாப்யாசம் கூட நல்ல பலனைத் தரும்.

கர்மயோகத்தில் பக்தி:-
கர்ம யோகத்தைப் பின்பற்றுவோர், “செயல்களையும் கடமைகளையும் சரியாக ஆற்றுவதற்கான சக்தியை இறைவான் அருளுகிறான். செயல்களின் பலன் கூட இறையருளால் கிடைக்கிறது” என்ற உணர்வோடு செயலாற்ற வேண்டும்.
“நான் செய்கிறேன், என் நிர்வாகம், நான் உயர்ந்தவன்” என்று எண்ணாமல் “இந்த நற்செயல்களைச் செய்யும் சக்தியை இறைவன் எனக்கு அருளியுள்ளான். அதனால் இதன் பலனை இறைவனுக்கு அளிக்கிறேன்” என்ற எண்ணத்தோடு நடந்து கொண்டால் செயல்களைச் செய்யும் போது ஏற்படும் கர்வம் நீங்குகிறது. அதோடு மனதின் கடினத் தன்மை நீங்கி மிருதுவான சுபாவம் ஏற்படுகிறது.

அதோடு கூட, “கர்ம பல ப்ராதாதாவாக இறைவன் இருக்கிறான். அவன் என்னை கவனித்துக் கொண்டிருக்கிறான். என் முயற்சியை நான் இயற்றுவேன். கட்டாயம் நல்ல பலனை அருளுவான். என் செயல்களில் குறைவிருந்தாலும் அவனருளால் பரிபூரணமான பலன் கிடைக்கும்” என்ற தைரியம் கர்மயோகத்தில் பக்தி மூலம் கிடைக்கிறது.

உபாசனையில் பக்தி:-
குருவிடமிருந்து ஒரு மந்திரம் பெற்று அதற்கான தேவதையை உபாசனை செய்து வழிபட்டு வருபவர்களுக்கும் கூட பக்தி அவசியம் இருக்க வேண்டும். மந்திர ஜபமும் பூஜையும் செய்தால் மட்டும் போதாது. இறைவன் உள்ளான் என்ற திட நம்பிக்கையும் அன்பும் இருக்க வேண்டும். ஏனென்றால், ஏதோ நேரம் சரியில்லை என்று சொல்லி மந்திரங்கள் ஸ்தோத்திரங்கள் படிப்பவர்கள் இருப்பார்கள். சுயநலத்திற்காகவோ காரியசித்திக்காகவோ ஒரு தெய்வத்தைச் சரணடைந்து வழிபாடு செய்பவர்கள் இருக்கிறார்கள். இதுவும் பக்திதானே என்று கேட்கலாம். இதனை சாதாரண பக்தி என்று கூற வேண்டும். ஆனால் அந்த உபாசனையிலும் வழிபாட்டிலும் கூட நாம் வழிபடும் தெய்வத்தின் மீது அபாரமான அன்பு கொண்டு கள்ளமில்லாமலும் சுயநலமில்லாமலும் இருந்தால் அது உத்தம பக்தி எனப்படும். அதனால் உபாசனா பக்தியில் கூட இரண்டு விதங்கள் நமக்குத் தென்படுகின்றன.

மந்திரங்கள், நியமங்கள், பூஜைகள், யந்திர வழிபாடு, விக்ரக ஆராதனை இவை எல்லாமும் உபாசனை எனப்படும். இந்த உபாசனையில் கூட பகவான் மீது பிரேம பக்தி இருந்தால் அது உபாசனா மார்க்கத்தில் பக்தி என்றழைக்கப்படும்.

ஞானத்தில் பக்தி:-
ஞானத்தில் முதன் முதலில் குரு மூலம் உபதேசத்தைப் பெற்று விசாரணை செய்து, மனனம் செய்ய வேண்டும். ஸ்ரவணம், மனனம், நிதித்யாசனம் என்று ஞானத்தில் மூன்று வித சாதனைகள் உள்ளன.

ஞான யோகத்தில் கூட இத்தகைய பரிபக்குவம் ஈஸ்வர அனுக்கிரகத்தால்தான் கிடைக்கிறது என்ற உணர்வு இருக்க வேண்டும். அப்படியின்றி, பக்தியை மறந்து, ஈஸ்வரனைத் துறந்து, “நான் ஞான மார்க்கத்தில் இருக்கிறேன். நான் மேதாவி!” என்று நினைத்தால் அத்தகைய ஞான மார்க்கம் அகங்காரத்திற்குக் காரணமாகி வீழ்த்தி விடக் கூடியது என்பதை அறிய வேண்டும்.

எனவே ஞான மார்கத்தில் வேதாந்த வாக்கிய ஸ்ரவணம், மனனம் போன்றவை முக்கியமானாலும் கூட அந்த வேதாந்த வாசனை ஈஸ்வர கிருபையால் கிடைக்கிறது என்பதை உணரவேண்டும்.

இந்த இரகசியத்தையே விவேக சூடாமணியில் ஆதி சங்கரர், “ஈஸ்வரானுக்ரஹா தேவா…… அத்வைத வாசனா!” என்று கூறுகிறார். இறையருள் இருந்தால் மட்டுமே அத்வைத வாசனை அதாவது வேதாந்த அறிவு கிட்டும்.

எனவே வேதாந்தம் என்றால் நாத்திகமல்ல. இறைவனை நிந்தித்து, “நானே பிரம்மஞானி, நானே பிரம்மம்!” என்று நினைத்துக் கொண்டால் அது அஞ்ஞானம் எனப்படும். இறையருளால் மட்டுமே ஞான சித்தி கிடைக்கும்.

இந்த விஷயம் ஞான சாஸ்திரங்களான உபநிஷத்துகளில், “முமுக்ஷுர்வை சரணமஹம் பிரபத்யே” என்ற கூற்று மூலம் தெரிகிறது. “மோக்ஷத்தில் விருப்பமுள்ள நான், பிரம்மாவுக்கே ஞானத்தை அளித்த பரமாத்மாவை சரணடைகிறேன்” என்று கூறுகிறான் சாதகன்.

அதாவது பிரம்ம தேவருக்கே வேத ஞானத்தை அருளிய பகவான் எனக்குச் சரியான ஞானத்தை அருள வேண்டுமென்று ஞானமார்க்கத்தில் பயணிக்கும் சாதகன் இறைவனை வணங்கிச் சரணடைகிறான்.

கர்மமார்க்கத்திலும் இறைவனிடம் சரணடைய வேண்டும். உபாசனா மார்க்கத்திலும் இறைவனிடம் சரணடைய வேண்டும். ஞான மார்க்கத்திலும் இறைவனிடம் சரணடைய வேண்டும். எனவே, இம்மூன்றிற்கும் பக்தி மிகவும் பிரதானமான தகுதி. அதனால் பக்தியை விலக்கிய யோகம் என்றெண்ணாமல் மூன்றிற்கும் முக்கியமானது பக்தியே என்றறிந்து கொண்டு நடக்க வேண்டும்.

பக்திக்கு யார் தகுதியானவர்?

பக்தியின் சிறப்பு என்னவென்றால் எப்படிப்பட்டவராயிருந்தாலும் பக்தி மார்க்கத்திற்கு அருகதையுடைவர் என்பதே! எந்த இனமானாலும் ஆணானாலும் பெண்ணானாலும் குழந்தையாயினும், முதியோராயினும் யாராயிருந்தாலும் இறைவன் மீது பிரேமை கொண்டு இறைவனுக்குப் பிரியமான தர்மத்தை அனுசரித்து வாழ்ந்து வருவாராயின் அவர் பக்தி மார்க்கத்திலிருப்பவரே!

மிக எளிமையான வழி இது. மனத்தூய்மை இருந்தால் போதும். பெரிய பெரிய சாஸ்திரங்கள் படித்திருக்கத் தேவையில்லை. கர்ம யோகத்தின் பாரமும் சுமக்கத் தேவையில்லை. அவரவர் தர்மத்தை பகவத் ப்ரீதியாக அனுசரித்தபடி, இறை சிந்தனையில் இருந்தால் அதுவே பக்தி மார்க்கம். வாழ்க்கையில் அது ஒன்று இருந்தால் போதும், நிறைநிலை கிட்டி விடும்.

பக்தி பழுத்து வரும் போது பரிபூரணத்தைப் பெறுகிறது. அப்படிப்பட்ட பரிபூரணம் அடைந்த பக்தர்களை மகாத்மாக்கள் என்கிறோம். அப்படிபட்டவர்கள் எத்தகைய குலத்தில் உதித்திருந்தாலும் அவர்கள் உயர்ந்தவர்களே! இதே கருத்தை அன்னமையா, “ஏ குலசுடைனனேமீ? எவ்வரைனனேமீ?” என்கிறார்.

அதே போல் உத்தமமான பக்தனிடம் எட்டு குணங்கள் இருக்கும் என்று பரமேஸ்வரன் கூறுகிறார். அவையாவன – 1. இறை பக்தனுக்கு தன் போன்ற இறை பக்தர்களிடம் சினேக பாவனை ஏற்படும். 2. இறை வழிபாடுகளிலும் பூஜைகளிலும் விருப்பமுள்ளவனாக அவற்றில் பங்கேற்பான். 3. இறைவனின் சேவையில் தன் உடலை ஈடுபடுத்துவான். 4. க்ஷேத்ராடனம், தீர்த்தாடனம், ஜபம் போன்ற ஆன்மீக சாதனைகளில் ஆர்வத்தோடு பங்கு கொள்வான். 5. பகவானின் கதைகளைக் கேட்பதில் விருப்பமுள்ளவனாக இருப்பான். 6. இறைவனின் லீலைகளைக் கேட்கும் போது உணர்ச்சி வசப்படுவான். கண்ணீர் விடுவான். தொண்டை தழுதழுக்கும். உடல் புல்லரிக்கும். 7. அடிக்கடி இறைவனை நினைத்து மகிழ்ந்திருப்பான். 8. வாழ்க்கையில் தைரியமாக இருப்பான். நான் இறைவனை சரணடைந்துள்ளேன் என்ற தைரியம் அவனை வழிநடத்தும். இந்த எட்டு லட்சணங்களும் எவரிடம் இருந்தாலும் அவர் மிகச் சிறந்தவரே! என்று கூறுகிறான் இறைவன்.

அவன் மிலேச்சனாக இருந்தாலும் சரி. அவன் சிறந்த பக்தனே! இந்த எட்டு குணங்களோடு கூடிய பக்தனாக இருந்தால் அவன் வேத வேதாந்திகளை விடச் சிறந்தவனே என்கிறான் இறைவன்.

அவனே உண்மையான சந்நியாசி. அவனே உண்மையான பண்டிதன். பகவான் மேல் பக்தி யில்லாதவன் நான்கு வேதங்களையும் படித்தறிந்தவனாக இருந்தாலும் கூட இறைவனின் அன்புக்குப் உகந்தவனாக மாட்டான். பக்தியோடு இருந்தால் சாஸ்திர ஞானம் இல்லாவிட்டாலும் கூட அவன் உய்வடைந்து விடுவான் என்று கூறும் பரமேஸ்வரன் “அப்படிப்பட்ட பக்தனுக்கும் எனக்கும் பேதமில்லை!” என்று கூறுகிறான்.

அப்படிப்பட்ட பக்தி சாம்ராஜ்யத்திற்கு வந்தனம்!

தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe