அத்திவரதர் வைபவத்தில் ஆகஸ்ட் 15 நாளை நண்பகல் 12 மணிக்கு பிறகு கிழக்கு கோபுர நுழைவு வாசலில் பக்தர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று கோயில் நிர்வாகம் கூறியுள்ளது.
நாளை மாலை 5 மணி வரை திருக்கோயிலின் உள்ளே வந்தவர்கள் அத்தி வரதரை தரிசிக்கலாம்; மாலை 6 மணிக்கு கண்ணாடி அறையிலிருந்து வரதர் புறப்பாடு நிகழ்கிறது! மாலை 6.30க்கு கஜேந்திர மோக்ஷம் ஆடி கருடன் உற்சவங்கள் நடைபெறுகின்றன!
மாலை 7 மணிக்கு உள் புறப்பாடு கண்டருளும் அத்திவரதர் இரவு 8 மணிக்கு கண்ணாடி அறைக்கு எழுந்தருளுகிறார்.
ஆகஸ்ட் 16 அன்று விஐபி தரிசனம் இல்லை; பொது தரிசனம் மட்டுமே உண்டு.
ஆக. 17ஆம் தேதி விவிஐபி., விஐபி., மற்றும் பொது தரிசனம் உட்பட எந்த வித தரிசனமும் இல்லை. அன்று அத்திவரதர் அனந்தசரஸ் திருக்குளத்துக்குள் மீண்டும் எழுந்தருளுகிறார்.
ஆகம விதிகளின் படி 17-ஆம் தேதி அத்திவரதர் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்படுவார் என காஞ்சீபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.
காஞ்சீபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர்,
அத்திவரதரை இதுவரை 89.75 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். பக்தர்களின் வருகை அதிகமாக இருப்பதால் தரிசனத்தை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
அத்திவரதர் வைபவத்தில் நாளை 12 மணியுடன் விஐபி தரிசனம் நிறைவு பெறுகிறது. நாளை மறுநாள் விஐபி தரிசனம் கிடையாது. 17-ஆம் தேதி அன்று ஆறு கால பூஜைகள் நடத்தப்படும்.
ஆகம விதிகளின் படி அத்திவரதர் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்படுவார். அனைத்து துறையினரும் இரவு பகல் பாராமல் சிறப்பாக, அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றி வருகின்றனர். பாதுகாப்பு பணியில் காவல்துறையின் பங்களிப்பு முக்கியமானது, போக்குவரத்து வசதிகளும் முறையாக செய்து கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
முன்னதாக, அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியது. அத்திவரதர் தரிசனத்தை நீட்டிப்பது பற்றி அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறிய உயர் நீதிமன்றம் இது குறித்து தாங்கள் உத்தரவிட முடியாது என்று கூறியது.
அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்கக் கோரி ஸ்ரீவைஷ்ணவ ராமானுஜ சபா தலைவர் தொடர்ந்த வழக்கில் நீதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்தார். இந்த வழக்கின் விசாரணையின் போது, தரிசனத்தை நீட்டிக்க போவதில்லை என அறநிலையத் துறை அமைச்சர் அறிவித்தார் என்பதை அரசு தரப்பு உறுதிபடக் கூறியது.