அத்திவரதர் வைபவம் இனிதே நிறைவுற்றது. நம் வாழ்நாளில் நாம் கண்ட ஒப்புயர்வற்ற திருவிழா இது என்பதில் ஐயமில்லை.. காஞ்சீபுர வாஸிகளான நமக்குப் பெருமையும் கர்வமும் தகும் !
48 நாட்கள் ! ஒரு கோடி மக்கள் ! நம் அனைவரின் இல்லங்களிலும் தொடர்ச்சியாக உறவினர்களும் விருந்தாளிகளும் என நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையில் எந்நாளும் மறக்கவியலாத / மறக்கக் கூடாத ஒரு சிறந்த நிகழ்வாக அத்திவரதர் வைபவம் பதிவானதை மறுப்பாரில்லை !
செய்தி ஊடகங்கள், தொலைக்காட்சி விவாதங்கள், ஃபேஸ்புக் முக்கியமாக நாத்திகர்களின் நாக்கு என எங்கும் அத்திவரதரே வியாபித்திருந்தார் !
ஆன்மிகப் புரட்சி ! ஒரு மண்டலப் புரட்சி !
செயற்கரிய செய்த பெருமான் நேற்று மீண்டும் அநந்த ஸரஸ்ஸில் கள்ள நித்திரை கொள்ளச் சென்று விட்டான்.
மாவட்ட நிர்வாகம், அறநிலையத் துறை, காவல்துறை & திருக் கோயில் நிர்வாகம் பக்தர்களுக்கு இயன்றவளவில், நிறைவாகவே ( சில குறைகளை மறுப்பதற்கில்லை ) வசதிகளைச் செய்து கொடுத்தனர்.
கோயிலினுள்ளே, பக்தர்களுக்குப் பெருமாள், தாயார் தரிசனம் முற்றிலுமாக தடை செய்யப் பட்டி ருந்தது சோசநீயமே!
ஆயினும் உள்ளுறையும் தெய்வங்களுக்கு, க்ரமமாக திருவாரா தனம், தளிகை & அருளிச் செயல் கைங்கர்யங்கள் தங்குதடையின்றி, 48 நாள்களும் இரண்டு வேளைகளிலும் நடைபெற்றதைத் தவறாமல் குறிப்பிடத் தான் வேண்டும் !
கோடை உத்ஸவம், திருவாடிப்பூர உத்ஸவம், ஆனி ஆடி கருடோத்ஸவங்கள், முக்கியமாக ஆனியிலும் ஆடியிலும் வரும் பெரியாழ்வார், ஸ்ரீமந்நாதமுநிகள் & ஆளவந்தார் சாற்றுமறைகள் ( இத்தனை பெரிய அத்திவரதர் வைபவத்திலும் ) மிகச் சிறப்பாக, எவ்வித இடையூறுகளுமின்றி நடைபெற்றதை ஶ்லாகித்தே ஆகவேண்டும்.
ஆழ்வாராசாரியர்கள் சாற்றுமறைகள் திருக்கோயில் பாரம்பரிய பழக்கவழக்கங்களை அநுஸரித்து, எந்தவிதமான சண்டை சச்சரவுகளுக்கும் மனக்கசப்புகளுக்கும் இடங்கொடாத வகையில், சிறப்பாக ( எப்போதும் நடக்கிற வகையிலேயே ) நடத்தப்பட்டதற்கு திருக்கோயில் நிர்வாகத்திற்கும் ( நிர்வாக அதிகாரி ), மணியகாரர் ஸ்வாமிக்கும், அந்தரங்க (உள்துறை) கைங்கர்யபரர்களுக்கும் நன்றிகளும் வணக்கங்களும் !
அத்தி(கிரி) வரதர் என்றென்றும் நம்மைக் காப்பாராக!!
- அக்காரக்கனி ஸ்ரீநிதி