மாமல்லபுரம் ஸ்தலசயனப் பெருமாள் திருக்கோவிலில் பூதத்தாழ்வார் அவதார உற்சவம் இன்று தொடங்கி நவம்பர் 5 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
பன்னிரு ஆழ்வார்களில், முதல் ஆழ்வார்கள் மூவர் என்று போற்றப்படும் பொய்கையார், பூதத்தார், பேயாழ்வார் ஆகிய மூவரில், நடுவிலுள்ள ஆழ்வார் பூதத்தாழ்வார். மூவரும் முறையே ஐப்படி மாதம் திருவோணம், அவிட்டம், சதயம் என வரிசையாக மூன்று நட்சத்திரங்களிலும் அவதரித்தவர்கள்.
பூதத்தாழ்வார், மாமல்லபுரம் நந்தவன தோட்டத்தில் குருக்கத்தி மலரில் அவதரித்தார். இவர், மாமல்லை தலசயனப் பெருமாள் கோவிலில் தனி சந்நிதியில் அருள்பாலித்து வருகிறார்.
இந்தக் கோவிலில் இவரது அவதார உத்ஸவம் இன்று தொடங்குகிறது. மாலை 3 மணிக்கு பூதத்தாழ்வார் தலசயனப் பெருமாள் நில மங்கை தாயார் தேவிகள் ஆகியோருடன் சிறப்பு திருமஞ்சனம், பின்னர் நாலாயிர திவ்யப் பிரபந்த சேவை நடக்கிறது. மாலை 6 மணிக்கு பூதத்தாழ்வார் திருவீதி உலா வருகிறார். பிறகு கோவிலுக்கு திரும்பி இரவு 7.30க்கு சாற்றுமுறை நடைபெறுகிறது.
இவ்வாறு, வரும் நவம்பர் 5 ஆம் தேதி வரை இந்த உத்ஸவம் தினந்தோறும் நடைபெறுகிறது. பூதத்தாழ்வார் அவதார உத்ஸவத்தின் ஒன்பதாம் நாள் உத்ஸவமாக நவம்பர் 4 ஆம் தேதி ஆழ்வார் திருத் தேரில் வீதியுலா வருகிறார்! பூதத்தாழ்வார் அவதார உத்ஸவத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் திருக்கோயிலுக்கு வந்து நிலமங்கைத் தாயார் சமேத தலசயனப் பெருமாள், பூதத்தாழ்வாரை தரிசித்து அருள் பெறுகின்றனர்.