பிப்ரவரி 1 சனிக் கிழமை இன்று ரத சப்தமி, சூரிய ஜெயந்தி, வைவஸ்வத மன்வாதி, அபோஜ்யார்க்க விரதம் என்ற பண்டிகைகள் உள்ளன. பிரத்யக்ஷ பகவானான சூரியநாராயணன் பாதை மாற்றி பயணிக்கும் சுப சமயம் இது.
ரதசப்தமி உத்தராயணத்தில் வரும் உயர்ந்த பண்டிகை. இன்று பிரம்ம முகூர்த்தத்தில் முக்கிய நட்சத்திரங்கள் எல்லாம் ரத வடிவில் இருக்கும். சகல தேவதைகளின் மயமான ஆதித்யனை வழிபடுவதால் தேஜஸ், ஐஸ்வர்யம், ஆரோக்கியம் அனைத்தும் கிட்டும்.
சப்தமி திதி சூரியனுக்கு உகந்த நாள். இன்று நாம் ஸ்நானம் செய்யும் போது சூரிய நாராயணனை தியானித்து தலை மீது எருக்க இலைகளும் இலந்தை இலைகளும் வைத்துக் கொண்டு குளிக்க வேண்டும். இந்த இலைகள் சூரிய சக்தியை சேமித்து வைக்கும் குணம் கொண்டவை.
குளித்தபின் சூரியனுக்கு
“சப்தசப்தி வஹப்ரீத சப்த லோக ப்ரதீபன,
சப்தமீ சஹிதோ தேவ க்ருஹாணார்க்யம் நமோஸ்துதே!” என்ற ஸ்லோகம் சொல்லி அர்க்கியம் விடவேண்டும்.
சூரிய பகவானை வழிபட்டு பசுஞ்சாணத்தால் செய்த வரட்டிகளை எரித்து சமைத்த பாயசத்தை அவரைஇலையில் வைத்து சூரியனுக்கு நிவேதனம் செய்யவேண்டும்.
மார்கழி மாதத்தில் விடியற்காலை கோலமிட்டு அதில் பசுஞ்சாணத்தால் சிறு சிறு உருண்டைகளாக பிடித்து பரங்கிப் பூ வைத்து அலங்கரிப்பது வழக்கம் அல்லவா? அந்த உருண்டைகளை பூவோடு அப்படியே எடுத்து காய வைத்துக் கொள்ளவேண்டும்.
வீட்டின் முன் அல்லது தோட்டத்தில் சுத்தமான இடத்தில் பசுஞ்சாணம் கொண்டு மெழுகி கோலமிட்டு காவியிட்டு அதன் மேல் குமுட்டி அடுப்பு வைத்து அந்த கோமய உருண்டைகளைக் கொண்டு தீயாக்கி அதன்மேல் பொங்கல் அல்லது பால்பாயாசம் மிகக் குழைவாக சமைத்து சூரியபகவானுக்கு பழம் தேங்காயோடு நிவேதனம் செய்யவேண்டும்.
ரதசப்தமி நாள் சூரிய கிரகணத்திற்குச் சமமான புனிதமான நேரமாதலால் ஸ்நானம், தானம், ஜெபம் இவற்றுக்கு மிக முக்கியமானது. இன்று பரங்கிக்காய் தானம் அளிப்பது சிறந்தது.
Source: ருஷிபீடம் மாத இதழ்