ஸ்ரீவைஷ்ணவ குரு பரம்பரையில், இப்பூவுலகில், இக்கலியுகத்தில் அவதரித்த ஆசார்யர்களுள் முதன்மையானவர் ஸ்ரீ நம்மாழ்வார்/சடகோபன்/பராங்குசன்/காரிமாறன்/குருகூர் நம்பி !! எனவே ஆதி குரு என்று போற்றப் படுகிறார். அவர் திருநட்சித்திரம் வைகாசி விசாகம் இன்று (04/06/2020).
இவர் அவதரித்து 5120 வருடங்கள் ஆகின்றன.
நம்மாழ்வார் தனியன்:
(நம்மாழ்வாருக்கு -அவர் அருளிச் செய்த தமிழ் வேதங்களுக்கு பல தனியன்கள் இருந்தாலும்,பரமாசார்யர் ஸ்ரீஆளவந்தாரும்,அவரது மானசீக சீடர் ஜகதாசார்யர் ஸ்ரீராமானுஜர் அருளிய தனியன்களைப் பார்ப்போம்:
ஸ்ரீ ஆளவந்தார்:
“மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதி:
ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம்!
ஆத்யஸ்ய ந:குலபதேர் வகுளாபிராமம்,
ஸ்ரீமத் ததங்ரியுகளம் ப்ரணமாமி மூர்த்தநா!!”
“வகுளமாலை(மகிழம்பூ) தரித்தவரும்,தாமரைத் திருவடிகள் முழுதும் ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ என்னும் திவ்யமஙகளம் நிறைந்திருப்பவரும், எங்கள்(ஸ்ரீவைஷ்ணவ) குலபதியும் (தலைவர்) ஆன நம்மாழ்வார் திருவடிகளில் தண்டம் சமர்ப்பிக்கிறேன்!.
நம் குலத்தாருக்கு அவரே தாய், தந்தை, கணவர்(மனைவி), மக்கட்பேறு,மற்றும் எல்லாச் செல்வங்களும் ஆவார்!!”
ஸ்ரீராமானுஜர்:
ராமானுஜர் மூன்று ஆழ்வார்களுக்கு தனியன் அருளியுள்ளார்.ஒருவர் வைணவகுலத்துக்கே மன்னர்
(குலபதி);ஆழ்வார்களின் அரசர் (தலைவர்) நம்மாழ்வார்.
“முந்துற்ற நெஞ்சே!முயற்றி தரித்துரைத்து,
வந்தித்து வாயார வாழ்த்தியே-சந்தமுருகூரும் சோலைசூழ் மொய்பூம் பொருநல்,குருகூரன் மாறன் பேர் கூறு”
(பெரிய திருவந்தாதி)
“நல்ல விஷயங்களிலே-முற்பட்டு செல்லுகிற-ஓ மனமே !
நான் இப்போது உனக்கு உரைக்கும் விஷயத்தில் உற்சாகம் கொண்டு- என் நிலைமையை ஆழ்வார் இடம் விண்ணப்பித்து,ஆழ்வார் அருளிச் செய்த இந்த பிரபந்தத்தை தரித்துக் கொண்டு, தண்டன் சமர்ப்பித்து-வாய் படைத்த பயனாக வாழ்த்தி,தேன் பெருகுகின்ற சந்தனச் சோலைகள் சூழ்ந்ததும், அழகிய தாமிர பரணியை உடையதுமான
திருக்குருகூர் நகருக்குத் தலைவரான நம்மாழ்வார் திருநாமங்களை நீ சொல்லு
தனியன் பாடிய எதிராஜரும்/தவராசரும் ஒரு அரசரே;
எதிகளின்(துறவிகளின்) அரசர்!!
முதல் தனியன் பாடிய ஆளவந்தாரும் சோழ நாட்டின் ஒரு பகுதிக்கு அரசராக இருந்தவரே.
1.ராமானுஜரின் புணர் அவதாரமான, ஸ்ரீ மணவாள மாமுனிகள் உபதேசரத்தின மாலையில்:
“ஏரார் வைகாசிவிசாகத்தின் ஏற்றத்தைப்
பாரோர் அறியப் பகர்கின்றேன் – சீராரும்
வேதம் தமிழ் செய்த மெய்யன் எழில் குருகை நாதன் அவதரித்த நாள் !” (14)
“உண்டோ வைகாசி விசாகத்துக்கு ஒப்பு ஒரு நாள்?
உண்டோ சடகோபர்க்கு ஒப்பு ஒருவர்?- உண்டோ
திருவாய்மொழிக்கு ஒப்பு? தென் குருகைக்கு உண்டோ
ஒரு பார் தனில் ஒக்கும் ஊர்?”(15)
மதுரகவி ஆழ்வாரின், ஆழ்வார் கட்டியம்
மதுரகவிகள், ஆழ்வார் ஒருவரையே தெய்வமாக ஏற்றுக்கொண்டு பாடிய 11 பாசுரங்கள் கொண்ட “கண்ணிநுண் சிறுத்தாம்பு” மிகப் பிரபலமானது.
ஆனால் அவரது ஆழ்வார் கட்டியம் அதிகம் பேசப்படவில்லை.
நம்மாழ்வார் பரமபதம் எய்திய பின்,அவருடைய சீடர் மதுரகவிஆழ்வார்,நம்மாழ்வார் விக்ரகத்தை எழப்பண்ணிச் கொண்டு பல ஊர்களுக்கும் சென்று, அவரது மேன்மையைப் பறைசாற்றிக் கொண்டிருந்தார்
அப்போது அவர் உரைத்த கட்டியம்:
“வேதம் தமிழ் செய்த பெருமாள் வந்தார்!
திருவாய்மொழிப் பெருமாள் வந்தார்!
திருநகரிப் பெருமாள் வந்தார்!
திருவழுதி வளநாடர் வந்தார்!
திருக்குருகூர் நம்பி வந்தார்!
காரிமாறன் வந்தார்!
சடகோபன் வந்தார்!
பராங்குசன் வந்தார்!”
தமிழ்ச் சங்கத்தில், ஆழ்வாரின் ஈரத்தமிழ்:
மதுரகவிகள் மதுரைக்கு வந்து நம்மாழ்வார் விருதுகளைக் கட்டியம் சொன்ன போது, மதுரைத் தமிழ்சங்கப் புலவர்கள்,ஆழ்வார் பாடல்களை சங்கப்பலகை ஏற்றுக்கொண்டால் மட்டுமே கட்டியம் கூறமுடியும் என்று தடுத்து விட்டனர்.மதுரகவி ஆழ்வாரும் அதற்குச் சம்மதித்து,ஆழ்வார் பாடிய 4 பிரபந்தங்கள்-1296 பாசுரங்களில் ஒரே ஒரு பாசுரத்தை-அதுவும் பல நான்குஅடி/எட்டுஅடிப் பாசுரங்கள் இருக்க,இரண்டு அடிப் பாசுரமான,
“கண்ணன் கழலினை நண்ணும் மனமுடையீர்,
எண்ணும் திருநாமம்,திண்ணம் நாரணமே”
(திருவாய்மொழி 10-5-1)
என்னும் பாசுரத்தை ஒரு சுவடியில் எழுதி சங்கப் பலகையில் வைத்தார். பலகையின் மறுதட்டில் 300 சங்கத்தமிழ் நூல்கள் வைக்கப்பட்டன.சங்கப்பலகை மற்ற நூல்களை எல்லாம் கீழே தள்ளிவிட்டு,ஆழ்வாரின் இந்த ஒரு பாசுரத்தை ஏற்றுக் கொண்டது.(இன்னொரு தட்டில் 300 புலவர்கள் ஏறினர்.அவர்கள் அனைவரையும் சங்கப்பலகை கீழே தள்ளி
விட்டது என்றும் ஒரு கூற்று!).அங்கிருந்த புலவர்களுக்கு நம்மாழ்வாரின் பெருமேன்மை புலப்பட்டது. அவர்கள் ஒவ்வொருவரும் ஆழ்வாரைப் போற்றி ஒரு பாடல் எழுதினர்;ஆச்சர்யமாக அனைவரும் ஒரே மாதிரியாக ஒரே பாடலை எழுதியிருந்தனர். அந்தப் பாடல்:
“ஈயாடுவதோ கருடற்கெதிரே,
இரவி(கதிரவன்)க்கெதிர் மின்மினி ஆடுவதோ,
நாயாடுவதோ உறுமும் புலிமுன்,
நரி,கேசரி(சிங்கம்) முன் நடையாடுவதோ,
பேயாடுவதோ ஊர்வசிக்குமுன்,
பெருமானடி சேர் வகுளாபரணன்
ஓராயிர மாமறையின்,தமிழின் ஒரு சொற்பொறுமோ,
இவ்வுலகிற் கவியே”
மேலும் ஒரு பாடலையும் அவர்கள் எழுதினார்கள்:
“சேமம் குருகையோ? செய்ய திருப்பாற்கடலோ?
நாமம் பராங்குசனோ நாரணனோ? – தாமம்
துளவோ, வகுளமோ? தோள்இரண்டோ? நான்கோ ?
உளவோ பெருமான் உனக்கு.”
(“நம்மாழ்வார் வாசம்செய்யும், இடம், திருக்குருகூரா,
திருப்பாற்கடலா? அவர் பெயர் பராங்குசனோ அல்லது ஸ்ரீமந் நாராயணனோ? அவர் அணிந்திருப்பது துளசி மாலையோ/வகுளமாலையோ?அவருக்குத் தோள்கள்,இரண்டா,
நான்கா?”
ஸ்ரீமந்நாராயணனே நம்மாழ்வாராக அவதரித்துள்ளாரோ என்பதை இப் பாடல் உரைக்கிறது.!!!
- அடியேன் பார்த்தசாரதி ராமாநுஜ தாசன்
ஸ்ரீபராங்குசாஷ்டகம் : ஒலி வடிவில் கேட்க…
ஸ்ரீ நம்மாழ்வாரின் சிறப்பு : ஒலிவடிவில்…