ஔஷத மயில்! ஔஷதம் என்பதற்கு, `நோய்களைத் தீர்க்கும் மருந்து’ என்பது பொருள். மயில் தோகையை மருந்தாக நாட்டுப்புற வைத்தியர்கள் பயன் படுத்துவதை இப்போதும் காணலாம்.
நாம் இங்கு சொல்லப்போவது பிறவிப்பிணியாகிய நோயைத் தீர்க்கும் மயிலாகும். பவரோக வைத்தியநாதனாகிய முருகப் பெருமான், இம்மயில்மீது அருவமாக எழுந்தருள்கிறான். அவன் இருப்பதைக் குறிக்க வேல் மட்டுமே விளங்கும்.
தவத்திரு பாம்பன் சுவாமிகளுக்கு விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் தங்கியிருந்தபோது, மயிலும் வேலும் தோன்றி அந்நோயை நீக்கியது இங்கு எண்ணத்தக்கதாகும். அந்த நிகழ்ச்சியை அவர் `அசோக சாலவாசம்’ எனும் நூலில் விவரித்துள்ளார். அவருக்கு இரண்டு பொன் மயில்கள் காட்சியளித்ததாகக் கூறப்படுகிறது.
பல அடியார்களின் வாழ்வில், மயில் தன் தோகையால் வீசுவதுபோன்ற தோற்றங்கள் ஏற்பட்ட பிறகு அவருடைய நோய் தீர்ந்த வரலாறுகள் உள்ளன. எனவே, இந்த மயில் `ஔஷத மயில்’ எனப்பட்டது. இதில் முருகன் அருவமாக எழுந்தருளியிருப்பதால், மயில்மீது அவனுடைய சக்திவேல் மட்டுமே தோன்றும்.
”வேலும் மயிலும் துணை ”
”வேல் அறிவின் அடையாளம். மயில் ஓங்காரத்தின் அடையாளம். துன்பம் வரும் வேளையில் ஓங்கார வேலன் அறிவாக வந்து நமக்கு நல்ல சிந்தனையைத் தந்து காப்பாற்றுவான் என்பதால்தான் வேலும் மயிலும் துணை என்றார்கள்”.
- திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் .