அம்மன்பேட்டை ஸ்ரீராமகிருஷ்ண விவேகானந்த மடத்தின் தலைவர், சுவாமி கிருஷ்ணானந்த மகராஜ் நேற்று முக்தி அடைந்தார்.
சுவாமி கிருஷ்ணானந்த மகராஜ் (வயது 75) தஞ்சாவூர் மாவட்டம், அம்மன்பேட்டையில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ண விவேகானந்த மடத்தின் தலைவராக இருந்தார். இவர், திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறை ஸ்ரீராமகிருஷ்ண தபோவனத்தின் நிறுவனரான சுவாமி சித்பவானந்த மகராஜிடம் பிரம்மச்சர்ய தீட்சையும், சுவாமி நித்யானந்த மகராஜிடம் சன்யாச தீட்சையும் பெற்றார்.
கடந்த 2001ஆம் ஆண்டு முதல், அம்மன்பேட்டை ராமகிருஷ்ண விவேகானந்தா மடத்தின் தலைவராக இருந்து வந்துள்ளார். ஆண்டுதோறும் பாரத பண்பாட்டு தேர்வு நடத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர், வீரத்துறவி விவேகானந்தர் ரத யாத்திரைகளை மிகுந்த சிரத்தையுடன் நடத்தினார்.
தற்போது, வரும் ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி, அம்மன்பேட்டை ஆசிரமத்தில், பவதாரணி ஸ்ரீ ராமகிருஷ்ணர் கோவில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார். புதிதாக பிரதிஷ்டை செய்ய, அன்னை சாரதாதேவி பஞ்சலோக விக்ரகம் வடிவமைக்கும் பணியைத் தொடங்கி வைத்தார்.
அன்று மாலையில், சுவாமிஜிக்கு ரத்த அழுத்தம் குறைந்து, அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். சில மணி நேர சிகிச்சைக்கு பின் மடத்திற்கு திரும்பியவர், வழக்கமான பணிகளில் ஈடுபட்டார்.
இந்த நிலையில் நேற்று காலை 11 மணிக்கு சுவாமி கிருஷ்ணானந்த மகராஜுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மடத்திலேயே முக்தி அடைந்தார். மாலை மடத்தில் சிறப்பு ஆராதனையுடன் அவருக்கு இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.
இந்த நிகழ்ச்சியில், தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி விமூர்த்தானந்த மகராஜ், சுவாமி மாத்ரு சேவானந்தா, திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தின் தலைவர் சுவாமி சுத்தானந்தா, செயலர் சுவாமி சத்யானந்தா உட்பட பலர் பங்கேற்றனர்.