ஸத்குரு ஸ்ரீஞானானந்தகிரி ஸ்வாமிகள் 48வது ஆராதனை விழா, பிலவ வருஷம் மார்கழி 5ம் தேதி (20.12.2021) திருக்கோவிலூர் அருகே உள்ள தபோவனத்தில் சிறப்பாக நடைபெற்றது.
கடந்த டிச.5ம் தேதி தொடங்கி நடைபெற்ற இந்த ஆராதனை விழாவில் தினசரி பாத பூஜைகள் சிறப்பாக நடைபெற்றன. முக்கிய நாட்களில் தினம் ஒரு ஹோமம் என, மஹாகணபதி ஹோமம், மஹாருத்ர ஹோமம், நவக்ரஹ ஹோமம், ஸ்ரீ சுதர்ஸன ஹோமம், நவசண்டி ஹோமம், ஸ்ரீவித்யா ஹோமம், ஆவஹந்தீ ஹோமம், ஸ்ரீசூக்த ஹோமம் ஆகிய ஹோமங்களும் நடைபெற்றன.
ஸ்வாமிகளின் அன்பர்கள் பங்கேற்பில், ஸ்ரீ பகவதி ஸேவை, லட்சார்ச்சனை, முருகன் காவடி, சதுர்வேத பாராயணம், சங்கரபாஷ்ய பாராயணம், சிவாகமம், ஸ்ரீமத் ராமாயணம், தேவீ பாகவத பாராயணம், சூர்ய நமஸ்காரம், அகண்டதாரா நாம ஜபம், ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாம ஜப யக்ஞம், 108 கலச க்ஷீராபிஷேகம், சஹஸ்ர சங்காபிஷேகம் ஆகியவையும் நடைபெற்றன.
ஸ்வாமிகளின் ஆராதனை விழா சிறப்பம்சமாக, ஸ்ரீஸ்ரீ கிருஷ்ணப்ரேமி ஸ்வாமிகளின் ஸ்ரீமத் பாகவத ப்ரவசனம் நடைபெற்றது. டிச. 5 முதல் 20ம் தேதி வரை இரு வார காலமும், பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்ட பஜனைகளும், பன்னிரு திருமுறை, திவ்யப் பிரபந்த பாராயணம், ஓதுவார்களின் தேவார இன்னிசை ஆகியவையும் சிறப்பாக நடைபெற்றன.
ஸ்ரீ ஸத்குரு ஞானானந்த ஸ்வாமிகளின் ஆராதனை தினமாகிய டிச.20ம் தேதி திங்கள்கிழமை அன்று, மிக விசேஷமான பாதபூஜை, அபிஷேக பூஜை, லட்சார்ச்சனை பூர்த்தி, ஆராதனை, தீர்த்த நாராயண பூஜை ஆகியவையும் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சிகளில் பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டு, ஸத்குரு ஸ்ரீஞானானந்தரின் பேரருளைப் பெற்றனர்.
ஸத்குரு ஸ்ரீ ஞானானந்தகிரி ஸ்வாமிகள் கர்நாடகத்தில் உள்ள மங்களாபுரியில் அவதரித்தவர். மிகச் சிறு வயதிலேயே குடும்ப பந்தமெனும் கட்டுகளில் இருந்து விலகி, ஆதிசங்கரர் நிறுவிய ஜோதிர் மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ சிவரத்னகிரி ஸ்வாமிகளால் ஆட்கொள்ளப்பட்டார். ஸ்ரீசிவரத்னகிரி ஸ்வாமிகள் பரிபூரணம் அடைந்த பின்னர், ஜோதிர் மடத்தில் இருந்து வெளியேறி, இமய மலையின் குகைகளில் நெடுங்காலம் ஞானத் தவம் புரிந்தார்.
பாரத தேசத்தின் பல பகுதிகளுக்கும் திருத்தலங்களுக்கும் பாதயாத்திரையாகச் சென்றார். நேபாளம், பர்மா, இலங்கை ஆகிய நாடுகளிலும் பாத யாத்திரையாக சஞ்சாரம் செய்தார். தமிழகத்தின் சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி கிராமத்தில் சில காலம் தங்கியிருந்தார். விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் வந்த போது, அவருடைய மனம் புனித பூமியான இங்கே நிலை கொண்டது. காரணம், சித்தர்கள் பலர் சஞ்சரித்த பூமி. வியாக்ரபாதர் தவமியற்றிய புனிதத் தலம். இங்கே சித்தலிங்க மடத்தில் ஸ்வாமிகள் சிலகாலம் தங்கியிருந்தார்.
பின்னர் தட்சிண பினாகினி எனும் பெயர் தாங்கிய தென்பெண்ணை ஆற்றின் வடகரையில், ரகோத்தம ஸ்வாமிகளின் மூலபிருந்தாவனம் அமைந்த பகுதிக்கு அருகில் தம் தவச்சாலையை அமைத்துக் கொண்டார்.
திருக்கோவிலூரில் இருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் தென்பெண்ணை நதிக்கரையில் அமைந்த இந்த இடம் ஸ்ரீஞானானந்த தபோவனமாய் பெரும் கீர்த்தி பெற்றது. அத்யாத்ம வித்யாலயமான ஞான ஆஸ்ரமத்தை நிறுவி அன்பர்களின் வாழ்வில் ஞான ஒளி ஏற்றி வைத்தார் ஸத்குரு ஸ்ரீஞானானந்த கிரி ஸ்வாமிகள்.