திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில், நேற்று இரவு, ஆருத்ரா இரவு அபிஷேகம், இன்று அதிகாலையில் கோபுர தரிசனம் நடைபெற்றது.
திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வர சுவாமி கோவில், திருவாலங்காட்டில் உள்ளது. இக்கோவில், சிவபெருமான் நடனமாடிய, ஐந்து சபைகளில் முதற்சபையான ரத்தினசபை ஆகும். இக்கோவிலில், ஆண்டுதோறும் ஆருத்ரா அபிஷேகம் மற்றும் கோபுர தரிசனம் வெகு விமர்ச்சையாக நடந்து வருகிறது.
நடப்பாண்டில், கடந்த ஜன.1 ஆம் தேதி இரவு ஆருத்ரா அபிஷேகம், மறுநாள் காலை கோபுர தரிசனம் நடந்தது. இந்தாண்டிலேயே இரண்டாவது முறையாக நேற்று (டிச.22ஆம் தேதி) ஆருத்ரா அபிஷேகம், இரவு, 9:00 மணிக்கு, நடராஜ பெருமானுக்கு விருட்சமான ஆலமரத்தின் கீழ், 34 வகையான பழங்களால் விடிய, விடிய அபிஷேகம் துவங்கி அதிகாலை, 3:00 மணி வரை அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து நடராஜ பெருமான் சிறப்பு அலங்காரத்துடன் கோவில் வளாகத்தில் வீதியுலா வந்தார். அதிகாலை, 5:00 மணிக்கு, நடராஜ பெருமான் கோவில் முன் வந்து, அருள்பாலித்தார். அப்போது கோபுர தரிசனம் நடைபெற்றது. மதியம் 1:00 மணிக்கு அனுகிரக தரிசனம் நடைபெற்றது.
இவ்விழாவில், தமிழகம் ஆந்திரா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், இரவு முழுவதும் வந்திருந்து மூலவரை வழிபட்டும், நடராஜபெருமானுக்கு நடக்கும் அபிஷேகம் பார்த்து வழிபட்டனர்.
இதற்காக கோவில் வளாகத்தில் பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட்டும், வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டும் ஜொலித்தது.
மாவட்ட எஸ்.பி., பொன்னி தலைமையில், 100க்கும் மேற்பட்ட போலீசார் பக்தர்கள் பாதுகாப்பு பணிக்காக ஈடுபட்டிருந்தனர். ஆருத்ரா விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் சிவாஜி மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.