ஸ்ரீ உ.வே தென்திருப்பேரை அரவிந்தலோசநன் ஸ்வாமி, மார்கழி மாத – திருப்பாவை உபன்யாஸ நிமித்தமாக ( ஒரு மாத காலம் ) காஞ்சியில் எழுந்தருளியிருந்தார்.
மாலை வேளைகளில் பெரிய காஞ்சீபுரம் தொண்டை மண்டல ஆதி சைவ வேளாளர் திருமணக் கூடத்தில் பெருவாரியான ச்ரோதாக்கள் கேட்டு மகிழ, திருப்பாவை தொடர் சொற்பொழிவு இனிதே நிறைவுற்றது.
மேற்படி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பற்பல அன்பர்களுடன் சேர்ந்து ஸ்ரீ உ.வே K.E.ஸம்பத் குமார் ( Lic ஸம்பத் ஸ்வாமி ) சிறப்பாகச் செய்திருந்தார்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக மார்கழி மாதங்களில் காஞ்சியில் திருப்பாவை உபன்யாஸங்கள் தடையின்றி நடைபெற்று வருவது பெருமைக்குரியது.
ஸ்ரீமதுபயவே அரவிந்த லோசநன் ஸ்வாமியை காலை வேளைகளில் பயன்படுத்திக் கொள்ளவும், அவர் மூலமாக ஸ்வரூப க்ரந்தங்களில் ஏதேனும் ஒன்றை நம் காஞ்சி வாழ் ஆஸ்திகர்கள் கேட்டின்புறவும், ஸ்ரீமதுபயவே. ஸாத்துப்படி ராமானுஜாசார்ய ஸ்வாமி ( அண்ணாச்சி ஸ்வாமி ) திருமாளிகையில் மேற்படி ஸ்வாமியைக் கொண்டு காலக்ஷேப கோஷ்டி ஏற்பாடு செய்யப்பட்டது.
காலக்ஷேபத்திற்கான விஷயமாக உடையவர் அருளிச்செய்த க்ரந்தங்களில் ஒன்றான ‘கத்யத்ரயம்’ எடுத்துக் கொள்ளப்பட்டது.
பெரியவாச்சான் பிள்ளை அருளிச்ச்செய்த வியாக்கியானத்தின் துணை கொண்டு நிகழ்த்தப்பெற்ற இந்த காலக்ஷேப கோஷ்டியில் நாடோறும் முப்பதுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் அன்பர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
உபன்யாஸக ஸ்வாமியும் அனைவரும் புரிந்து கொள்ளும் பொருட்டு விஷயங்களை எளிமையாகவும்; அதே சமயத்தில் ஓரம்ஶத்தையும் விடாமலும் தனக்கேயுரிய பாணியில் எடுத்துரைத்தது ஶ்லாகிக்கத் தகுந்தது.
ஸ்வாமியினுடைய கணீரென்ற குரலும், வார்த்தைகளின் (நேர்த்தியான) கோர்வையும், விஷயத்தில் உறுதியும் காலக்ஷேப கோஷ்டிக்கு அழகு சேர்த்தன.
சாற்றுமறை வைபவம் ஸ்ரீ உ.வே. அண்ணாச்சி ஸ்வாமி திருமாளிகையில் சங்கராந்தி அன்று மதியம் பற்பல மஹநீயர்கள் முன்னிலையில் வெகு சிறப்பாக நடந்தேறியது.
அன்றைய தினம் மூன்று கத்யங்களின் ஸாராம்ஶங்களை ( விரிவாகவே ) ஸ்வாமி எடுத்தியம்பினார்.
சுமார் இருபத்தைந்து நாள்கள் நடைபெற்ற அந்த காலக்ஷேப கோஷ்டியில் தொடர்ச்சியாக அந்வயித்திடாது ஸாற்றுமறைக்கு மட்டுமே வந்திருந்தவர்களுக்கும் கத்யத்ரயத்தின் ஏற்றங்கள் புரிந்திடும் வகையில் ஸ்வாமி உபன்யஸித்ததை அனைவரும் மெச்சினர்.
ஸ்ரீமத் பரமஹம்ஸேத்யாதி. ஸ்ரீ காஞ்சீ வாதிகேஸரி ஸ்ரீ ஸம்பத் குமார ராமாநுஜ அழகிய மணவாள ஜீயர் ஸ்வாமி, ஸ்ரீ மதுபயவே ஜகத்குரு. காதி ப்ர ப. ஸ்ரீநிவாஸாசார்ய ஸ்வாமி, ஸ்ரீ உ.வே ப்ர.ப ராஜஹம்ஸாசார்ய ஸ்வாமி ஆகியோர் பரம க்ருபையுடன் எழுந்தருளியிருந்து உபந்யாஸக ஸ்வாமியை விஶேஷமாக அநுக்ரஹித்து பாராட்டி மகிழ்ந்தனர்.
ஸ்ரீமதுபயவே அண்ணாச்சி ஸ்வாமி அனைவருக்கும் தக்க மரியாதைகளை; ஸந்மானங்களைக் கிரமமாகச் செய்தார்.
ஸ்ரீ உ.வே. தி.அ. அக்காரக்கனி ஸ்ரீநிதி ஸ்வாமி உபன்யாஸக ஸ்வாமிக்கும், ஸாற்றுமறையை நடத்திக் கொடுத்த பெரியவர்களுக்கும், ஶ்ரோதாக்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.
காலக்ஷேபம் ஸாதித்தருளின ஸ்வாமிக்கு பேரருளாளன் திருமாலை ப்ரஸாதங்களுடன், ஸ்ரீ யதோக்தகாரீ, ஸ்ரீ அஷ்டபுஜம், கூரத்தாழ்வான் ப்ரஸாதங்களும் ப்ராப்தமாயிற்று. அவரும் அனைவருக்கும் தன்னுடைய நன்றிகளையும் ப்ரணாமங்களையும் தெரிவித்துக் கொண்டார்.
கத்யத்ரய காலக்ஷேபத் தொடர் இனிதே நிறைவுற்றது !
- தகவல்: கேசவபாஷ்யம்