சந்திர கிரகணத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை அடைக்கப்பட்டது. ஆனிவார ஆஸ்தானம் நடத்தப்பட்டு, நாளை மதியம் 12 மணிக்கு பின் நடை திறக்கப்படும்.
சந்திரகிரகணத்தை முன்னிட்டு திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு கீழ் செயல்படும் அனைத்து கோவில்களும் மூடப்பட்டுள்ளன.
ஜூலை 17 நாளை அதிகாலை 1.31 மணி முதல் 4.29 மணி வரை சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இதை முன்னிட்டு, இன்று இரவு 7 மணிக்கு கோயில் நடை அடைக்கப் பட்டது. தொடர்ந்து கிரகணம் முடிந்த பின் நாளை காலை 5 மணி வரை கோவில் நடை அடைக்கப்பட்டிருக்கும்.
சுமார் 12 மணி நேரம் கோவில் நடை அடைக்கப்படுகிறது. குறிப்பாக திருப்பதி கோயில் சந்திரன் தலம் என்று போற்றப் படுகிறது. எனவே சந்திரன் முழு நிலவாக ஜொலிக்கும் பௌர்ணமி அன்று கிரிவலம் வருவது போல், திருப்பதி மலையில் கோயிலை வலம் வரும் அன்பர்கள் பலர்.
இன்று இரவு ஏற்படும் சந்திர கிரகணம், சம்பூர்ண கிரகணம் என்பதால் திருமலை திருப்பதி தேவஸ்தான கோவில்களுக்கு உட்பட்ட அனைத்து கோவில்களும் 6 மணி நேரத்துக்கு முன்பாகவே நடைசாத்தப்பட்டது.
முன்னதாக திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிக்கையில்…
ஜூலை 17 ஆம் தேதி காலை அதிகாலை 1.31 மணி முதல் 4.29 மணி வரை சந்திர கிரகணம் ஏற்படவுள்ளது. இதையொட்டி 16ஆம் தேதி இரவு 7மணி முதல் 17 ஆம் தேதி காலை 5 மணி வரை கோவில் நடை அடைக்கப்பட உள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு கீழ் செயல்படும் அனைத்து கோவில்களும் மூடப்பட உள்ளது. திருப்பதியில் உள்ள தேவஸ்தான தங்கும் விடுதியில் செயல்பட்டு வரும் அன்னதான கவுன்ட்டர்களும் மூடப்படும்.
சர்வ தரிசன அனுமதி ஜூலை 17ஆம் தேதி அதிகாலையில் கோவில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு சுப்ரபாத சேவையுடன் திறக்கப்பட உள்ளது. இதை தொடர்ந்து தோமாலை சேவை, பஞ்சாங்கம் படித்து, அர்ச்சனை போன்ற சேவைகள் ஏகாந்தமாக பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் அர்ச்சகர்கள் மட்டும் நடத்த உள்ளனர்.
தொடர்ந்து 11 மணிக்கு பிறகு சர்வ தரிசனத்தில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.
சந்திர கிரகணம் ஏற்பட உள்ளதால் அஷ்டதள பாத பத்ம ஆராதனை சேவை, வசந்த உற்சவம், சகஸ்கர தீப அலங்கார சேவை ஆகியவை ரத்து செய்யப் படும்.
17ஆம் தேதி ஆனிவார ஆஸ்தானத்தையொட்டி கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் ,வசந்த உற்சவம், சகஸ்கர தீப அலங்கார சேவை ரத்து செய்யப் படும்.