ஸ்ரீவில்லிபுத்தூரில் புகழ்பெற்ற திருவாடிப் பூரத் தேர் உத்ஸவம் இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் புகழ்பெற்ற ஆண்டாள் அரங்கமன்னார் திருக்கோவில் உள்ளது. இங்கு ஆடிப்பூர திருவிழா கடந்த 27-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் ஆண்டாள்- ரெங்கமன்னார் வீதி உலா தினசரி நடைபெற்று வருகிறது.
ஆடிப்பூர திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை கோலாகலமாக தொடங்கியது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேரில் 7 வடங்கள் இணைக்கப்பட்டு 2 வடங்கள் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, எம்.எல்.ஏ.க்கள் சந்திரபிரபா, ராஜவர்மன், ஆட்சியர் சிவஞானம், போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
தேர்த் திருவிழாவுக்காக 1,500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இருபினும், அத்தனை ஆயிரம் பக்தர்கள் திரண்டிருக்க, அமைச்சர்கள், விஐபி.,க்கள் கார் செல்வதற்காக மக்கள் கூட்டத்தை தள்ளிவிட்டு, வழி ஏற்படுத்தி பொதுமக்களுக்கு சிரமத்தைக் கொடுத்ததாக, பக்தர்கள் புகார் தெரிவித்தனர்.