ஸ்ரீ சிருங்கேரி ஆசார்யர்களின் வித்யையும் , விநயமும் (பகுதி-17)
– மீ. விசுவநாதன்
சாந்த நிலை
ஸ்ரீமத் ஆசார்யார் தம்மிடம் வரும் யாரையும் கண்டிப்பதும் கிடையாது. அதைர்யப்படுத்துவதும் கிடையாது. ஆனாலும் அவர்களுடைய கருணாகடாக்ஷத்தினால் திருந்தி ஸாத்விகர்களாகவும் , அசாரபரர்களாகவும் மாறியிருக்கிறவர்கள் அநேகர்.
“சந்தியாவந்தனம் பண்ணுகிறேன் என்று ஒருவர் சொன்னால், ” அப்படியா? அதற்கு மேல் புருஷார்த்த ஸாதனம் என்ன இருக்கிறது? கர்மா, பக்தி, ஞானம் எல்லாம் அதில் அடங்கி இருக்கிறது. காயத்ரீக்கு மேல் உத்தமமான மந்திரமே கிடையாது. இதைக் கைப்பிடித்திருக்கிறீர்களே ரொம்ப சந்தோஷம்” என்பார்.
ஒருவர் அதிக ஆசார அனுஷ்டானங்கள் இல்லாமலிருந்தாலும் மிக சிரத்தையுடன் அதிதி சத்காரம் செய்து வருகிறார் என்று கேட்டவுடன்,” ரொம்ப சந்தோஷம். எதைத் தானம் செய்தாலும் வாங்குகிறவன் “போதும்” என்று சொல்லுவது கிடையாது. அன்னதானம் ஒன்றில்தான் அதிதியாகவே “போதும்” என்று சொல்வார். அதனாலேயே இதை உத்தம தானமாக சாஸ்திரங்கள் சொல்லுகின்றன. தவிரவும் பசிக்கு அன்னம் போடுவது சாப்பிடுகிறவருடைய தேகத்தில் வைசுவாநர மூர்த்தியாக இருக்கிற பரமாத்மாவையே ஆராதனம் செய்வதாகும். அப்பேர்ப்பட்ட உத்தம கார்யத்தைச் செய்து வருகிறீர்களென்று கேட்க மிகவும் சந்தோஷம்” என்றார்கள்.
இன்னொருவர் என்னுடன் பள்ளிக் கூடத்தில் வாசித்தவர். தம் கிருஹத்தில் ஸ்ரீமத் ஆசார்யாருக்குப் பாத பூஜை செய்து பிரசாதம் வாங்கிக் கொள்ளும் போது,” நானும் கிருஷ்ணனும் ஒன்றாக வாசித்தோம். அவன் வக்கீல் உத்தியோகம் செய்கிறான். நான் வெறுமென வீட்டில் உட்கார்ந்து கொண்டிருக்கிறேன்” என்று மிகவும் தீனஸ்வரத்தில் சொன்னார். அதைக் கேட்டு ஸ்ரீமத் ஆசார்யார்,” அப்படியா? கிருஷ்ணனுக்கு சம்பாதித்து சாதிக்க வேண்டியதாயிருக்கிற பண சௌகர்யம் உங்களுக்கு ஸித்தமாயிருக்கிற தென்று தெரிகிறது. ரொம்ப சந்தோஷம். சம்பாதிக்கிற சிரமம் இல்லாததினால் அத்யாத்ம விஷயத்தில் மனசைச் செலுத்த உங்களுக்கு அவகாசம் இருக்கும். மிகவும் நல்லது” என்றார்கள்.
(ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகர பாரதீ மகாஸ்வாமிகளின் பெருமைகளைப் பற்றி ஸ்ரீ ஞானானந்த பாரதீ ஸ்வாமிகள் எழுதிய “ஸ்ரீ குருகிருபா விலாஸம்” என்ற நூலில் இருந்து பகிரப்பட்டது.)
“குருவின் கட்டளைப்படி நட”
ஒருமுறை சிருங்கேரிக்குக் குடும்பத்தார்களுடன் ஆசார்யாளை தரிசனம் செய்துவரச் சென்றிருந்தேன். எனக்கு மகன் பத்தாவது வகுப்புத் தேர்வு எழுதி முடித்திருந்த சமயமது. ஸ்ரீ தோரணகணபதி, ஸ்ரீ சங்கரர், ஸ்ரீ சாரதாம்பாளை தரிசித்துவிட்டுத் துங்கா நதிக்குத் தென்கரையில் நரசிம்மவனத்திற்குச் சென்றோம். அங்குதான் குருநாதர்கள் இருப்பார்கள்.
ஜகத்குரு ஸ்ரீ பாரதீ தீர்த்த மகாஸ்வாமிகளைத் தரிசனம் செய்வதற்காக நிறைய பக்தர்கள் வரிசையாக நின்றுகொண்டிருந்தனர். ஒவ்வொருவராக அவரை தரிசனம் செய்யும் பொழுது, அவர்களிடம் அவர்களது பக்தி பூர்வமான கேள்விகளுக்கு மிகவும் கருணையோடு பதில் சொல்லி ஆசிவழங்கிக் கொண்டிர்ந்தார். எங்களுக்கு ஐந்தாறு பேர்களுக்கு முன்பாக ஒரு பெரும் செல்வந்தர் தனது குடும்பத்தார்களுடன் அவரைத் தொழுது நின்றபடி தனது மகனுக்கு சமீபத்தில் நடந்த உபநயனம் (பூணூல்) பற்றிக் கூறி, குருநாதரின் ஆசிவேண்டும் என்று கேட்டார். (அவர் கன்னட மொழியில் பேசினார். எங்கள் அருகில் கன்னடம் தெரிந்த தமிழ்க் குடும்பத்தார் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் எங்களுக்கு அங்கு நடந்ததை தமிழில் மொழி பெயர்த்துக் கூறினர் )
அந்தச் செல்வந்த பக்தரின் மகனை நோக்கி சந்தியாவந்தன மந்திரத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட பகுதியைக் கேட்டார்.
அந்தப் பையன் “திரு திரு” வென விழித்தான்.
“உனக்கு இந்த மந்திரம் தெரியாதா” என்றார்.
அப்பொழுது அச்சிறுவனின் தந்தை குறுக்கிட்டு,” அவனுக்குப் பூணூல் போட்டவுடன்..அமெரிக்காவுக்குப் படிக்கச் சென்று விட்டான்… அதுதான் இன்னும் பாடமாகலை…” என்றார்.
உடனே குருநாதர் அந்தச் செல்வந்தரைப் பார்த்து, “நீங்கள் சந்தியாவந்தனம் பண்ணறேளோ” என்றார். அவரும் விழித்தார்.
அப்பொழுது ஆசார்யாள் அவரைப் பார்த்து,” வியக்தம்” (பயனில்லை)…” என்றார்.
மேலும் அவரிடம், “பெரியவர்களான நீங்களே இதுபோன்ற சத்கார்யங்களைச் செய்யவில்லையானால் உங்களது குழந்தைகள் எப்படிச் செய்வார்கள்.
குருநாதரின் வார்த்தையைக் கேட்காமல் அவருக்குக் காணிக்கை தந்து என்ன பயன். குருவின் வார்த்தைப் படி நீங்கள் நடந்தால்தானே உங்களது சந்ததியும் அந்த தர்மத்தைத் தொடர்ந்து செய்வார்கள். சந்தியாவந்தனம் செய்ய ஒரு பத்து நிமிடங்கள் உங்களுக்கு ஒதுக்க முடியாதா. இப்போதிருந்து அதை விடாமல் செய்யுங்கள் ” என்று ஒரு தாயின் நிலையில் இருந்து அந்தச் செல்வந்தருக்கும் , அவரது குடும்பத்தினருக்கும் சிரித்த முகத்துடன் கருணை பொங்க ஆசிகொடுத்தார். அந்தச் செல்வந்தர் குருநாதரின் முன்பு சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார்.
(வித்யையும் விநயமும் தொடரும் )