உலகம் முழுவதும் கோவிட் 19 வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இதையடுத்து நாடு முழுவதும் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் அதிகம் கூடுமிடங்களான பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், கோயில்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் தடுப்பு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளியூர், வெளிமாநில பக்தர்கள் வருகின்றனர். கோவிட்- 19 வைரஸ் பரவுவதைத் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதாரத் துறையால் வழங்கப்பட்ட அறிவுரையின்படி, காய்ச்சல், சளி, இருமல், உடல் சோர்வு, மூச்சுத்திணறல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டோரை கூட்ட நெரிசலில் செல்ல வேண்டாம் எனவும், அவர்களை உடனடியாக மருத்துவமனைக்குச் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் காய்ச்சல், சளி, இருமல் பாதிக்கப்பட்டோர் கண்டறியப் பட்டால் அவர்களுக்கு கோயில் உள்துறை அலுவலகம் மூலம் முகக் கவசம் வழங்கவும் பணியாளர்களுக்குக் கோயில் நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே, மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் இணை ஆணையர் நா.நடராஜன் மேற்பார்வையில் மீனாட்சி அம்மன் கோயிலில் பக்தர்கள் செல்லும் பகுதிகள், இரும்புத் தடுப்புகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இதில் கோயில் பணியாளர்கள் மற்றும் மாநகராட்சிப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.