இன்று வைகாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து வழிபாடு நடத்தினர் .
பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே தாணிப்பாறை வனத்துறை நுழைவு வாயில் முன்பு குவிந்தனர். பின்னர் காலை 6 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலைப்பாதை வழியாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு சென்றனர்.
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு உச்சியில் மாலையில் பால், பழம், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகப் பொருட்களைக் கொண்டு பவுர்ணமி சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். சுவாமிக்கு பவுர்ணமி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இந்த வழிபாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமியை தரிசனம் செய்து அருளைப் பெற்றனர்.
பக்தர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.தாணிப்பாறை வனத்துறை நுழைவு வாயில் பகுதியில் போலீசார், வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.