108 வைணவ ஸ்தலங்களில் ஒன்றான திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலில் வரும் ஜூலை 6-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி இன்று காலை சுத்தி கலச பூஜை துவங்கியது.
108 திவ்யதேசங்களில் மலைநாட்டு வைணவ திவ்ய ஸ்தலங்களில் ஒன்றான
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பிரசித்தி பெற்ற திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் திருப்பணிகள் கடந்த ஐந்து ஆண்டுகளாக நடந்து வருகிறது. இக் கோயிலில் தேவபிரசன்னம் பார்க்கப்பட்ட போது கும்பாபிஷேகத்துக்கு முன்பு பல்வேறு பரிகார பூஜைகள் செய்ய வேண்டும் என கூறப்பட்டது.
அதன்படி கடந்த 8 மாதங்களாக மாதம் ஒருமுறை கணபதி ஹோமம், மிருத்யுஞ்சய ஹோமம் ஆகியவை நடந்து வருகிறது.கடந்த இரண்டு நாட்களாள கணபதி ஹோமம், மகா மிருத்யுஞ்சய ஹோமம், திரிகால பூஜைகள், கணபதி பகவதி சேவை, தேவி பூஜை ஆகியன நடைபெற்றது.
இன்று காலை கணபதி ஹோமத்தைத் தொடர்ந்து சுத்தி கலச பூஜை, கலசாபிஷேகம் நடைபெற்றது.ஆதிகேசவப்பெருமாளுக்கு 25 கலசங்களிலும், கிருஷ்ணசாமிக்கு 9 கலசங்களிலும், அய்யப்ப சாமிக்கு ஒரு கலசத்திலும் பூஜைக்குப்பின்னர் கலசாபிஷேகம் நடக்கிறது. மேலும் வருகிற 25-ந் தேதி சர்ப்பபலி பூஜை நடைபெற உள்ளது.

