குமரி மாவட்டத்தில் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது வரும் ஜீன் 6ல் தேரோட்டம் நடைபெறும். திருவிழாக்களில் அய்யாவழி பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
குமரி மாவட்டத்தில் சாமிதோப்பில் அய்யா வைகுண்ட சுவாமி தலைமைப்பதி உள்ளது. இங்கு வருடந்தோரும் தை, ஆவணி மற்றும் வைகாசி மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த வருட வைகாசி திருவிழா நேற்று வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கியது.
முதல் நாள் கொடியேற்ற நிகழ்ச்சி யை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிடுதலும், 5 மணிக்கு அய்யாவுக்கு சிறப்பு பணிவிடையும், காலை 6 மணிக்கு திருக்கொடி ஏற்றும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. திருக்கொடியை பால. ஜனாதிபதி ஏற்றி வைத்தார்.
தொடர்ந்து பகல் 12 மணிக்கு வடக்கு வாசலில் அன்னதர்மம் நடைபெற்றது. இன்று சனிக்கிழமை இரவு 7 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் பதியை சுற்றி பவனி வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழா தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறுகிறது.
வருகிற 3-ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை எட்டாம் திருவிழா நடைபெறு கிறது. அன்று மாலை 5 மணிக்கு அய்யா வைகுண்டசுவாமி வெள்ளை குதிரை வாகனத்தில் எழுந்தருளி முத்திரி கிணற்றங்கரையில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சியும், தொடர்ந்து பல கிராமங்களுக்கு குதிரை வாகனத்தில் சென்று மக்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
தொடர்ந்து இரவு 11 மணிக்கு வடக்கு வாசலில் அய்யாவின் தவக்கோலகாட்சியும் தொடர்ந்து அன்னதானமும் நடைபெறுகிறது. 9-ம் திருவிழாவில் அனுமன் வாகனத்திலும், பத்தாம் நாள் இந்திரா வாகனத்திலும் அய்யா பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அடுத்த மாதம் ஜீன் 6-ம் தேதி திங்கள் கிழமை 11-ம் திருவிழா நடைபெறுகிறது. அன்று நண்பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று இரவு ரிஷப வாகனத்தில் அய்யா வீதிஉலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.