புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை செப் 16ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. செப் 21ஆம் தேதி வரை பூஜைகள் 5 நாட்கள் நடைபெறும்.
இந்த நாட்களில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், உஷபூஜை, உச்ச பூஜைக்கு பின் மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும். மாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு தீபாராதனை, புஷ்பாபிஷேகம் படிபூஜை நடைபெறும். அதை தொடர்ந்து இரவு ஹரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும். மேலும் தினசரி நெய்யபிஷேகம், உதயாஸ்தமன பூஜை, படி பூஜை உள்பட சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.
தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்டிபிசிஆர் நெகட்டிவ் சான்றிதழ் அல்லது கொரோனா தடுப்பூசி 2 டோஸ் போட்டதற்கான சான்றிதழ் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும். நிலக்கல்லில் இதுதொடர்பான ஆய்வு நடைபெறும். 17ஆம் தேதி முதல் முன்பதிவு செய்த பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து 5 நாட்கள் நடைபெறும் சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் 21ஆம் தேதி இரவு நடை அடைக்கப்பட உள்ளது.
