மாலே மணிவண்ணா மார்கழிநீ ராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பால்அன்ன வண்ணத்துஉன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பா டுடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்.
விளக்கம்:
‘ஒருத்தி மகனாய்’ பாசுரத்தில் ‘உன்னை அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில்’ என்றார்கள் ஆய்ச்சியர்கள். அதுகேட்ட கண்ணன், ‘இதில் எனக்கு ஒரு சந்தேகம் உண்டு. நம் மீது விருப்பம் என்றால் வேறு ஒன்றையும் விரும்பக் கூடாதே! பிறகு ஏன் இவ்வாறு லோகாயதப் பொருள்களைக் கேட்டு நிற்கிறீர்கள்?” என்றான்.
அதற்கு ஆய்ச்சிகள், “பிரானே. உன் திருமுகத்தைக் கண்டு, உன் திருநாமங்களை வாயாரச் சொல்ல, துணையாக இருக்கும்படியான நோன்பை பெரியவர்கள் கைக்கொள்ளச் சொன்னார்கள். அதற்குத் தேவைப்படுபவற்றை நீ தந்தருள வேண்டும்” என்று பிரார்த்திக்கும் பாசுரம் இது.
அடியார் மீது அன்பு கொண்டவனே! நீல மணி நிறத்தை உடையவனே! பிரளய காலத்தின் போது, ஆல் இலையில் பள்ளி கொண்டு அகிலம் காத்தவனே! மார்கழி நீராட்டத்துக்காக, உத்தமர்கள் கடைப்பிடிக்கக் கூடிய முறைகளில் வேண்டியவற்றைக் கேட்பாயாகில், அவற்றைச் சொல்லுகிறோம். பூமி உள்ளிட்ட அனைத்து உலகங்களும் நடுங்கும்படி, ஒலி எழுப்பக் கூடியது
பாஞ்சசன்யம். பாலைப் போன்ற தூய வெண்மை நிறத்தை உடைய அந்தப் பெருஞ்சங்கைப் போலிருக்கும் சங்குகள் வேண்டும். அதிக இடம் கொண்டதும் மிகப் பெரியனவுமான பறைகள் வேண்டும். திருப்பல்லாண்டு பாடுகின்றவர்கள், மங்கள தீபங்கள், கொடிகள், மேற்கட்டியாகிற விதானம் எல்லாம் வேண்டும். எங்கள் நோன்பு நிறைவேற இவற்றைத் தந்தருள வேண்டும்” என்று வேண்டுகிறார்கள் இந்தப் பாசுரத்தில்.
நோன்புக்கு இதென்ன பொருள்கள்? பெருமானின் திருப்பள்ளியெழுச்சிக்கு சங்குகள் வேண்டும்; புறப்பாடுக்குப் பறை வேண்டும்; பறை கொட்டிச் செல்லும்போது எதிரே நின்று திருப்பல்லாண்டு பாட அரையர் வேண்டும்; அவ்வாறு பாடுபவர்களும் நாங்களும் ஒருவர் முகம் ஒருவர் கண்டு செல்ல மங்களதீபம் வேண்டும்; நெடுந் தொலைவிலேயே எங்கள் கூட்டத்தைக் காண வசதியாக கொடி வேண்டும்; புறப்பட்டுப் போகும்போது பனி தலையின் மீது விழாமல் காக்க ஒரு மேற்கட்டி வேண்டும். இவையே இவர்களின் நோன்புக்கு வேண்டிய பொருள்களாம்!
விளக்கம்: செங்கோட்டை ஸ்ரீராம்