ஆறாம் பாசுரம்: புள்ளும் சிலம்பின காண்… இவ்விடத்திலே பிள்ளைப் பிள்ளையாழ்வான் பகவத் ஸ்மாஸ்ரயாணத்துக்கு அனுகூலமான காலத்தை ஸூசிப்பிக்கின்ற பக்ஷி நாதமல்லது ஆத்மாவுக்கு உத்தேசமில்லை என்று அருளிச் செய்வர்.
அதாவது பொழுது விடிந்ததற்கு அடையாளமாக பறவைகளின் ஒலியைக் கொண்டு ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் தெரிவிப்பது திருப்பாவையில் நோக்கலாம் இப்படி நாம் சிற்றஞ்சிறுகாலை எழுந்து கண்ணனை, எம்பெருமானை ஆஸ்ரயிக்க உகந்த வேளையை நமக்கு உணர்த்தும் பறவைகளின் ஒலி மிகவும் உகந்தது என்றபடி.
இங்கு சேர்ப்பார்களைப் பக்ஷிலளாக்கி ஞான கர்மங்களை சிறகக்கி என்னும் ஆசார்ய ஹ்ருதய சூத்திரம் நினைக்கத்தக்கது. எம்பெருமானிடத்தில் நம்மைச் சேர்க்கும் ஆசாரியர்களை இந்த பக்ஷிகள் உணர்த்தும் என்றபடி.
புள்ளும் சிலம்பின காண்.. ஆண்டாள் பிறந்த ஊரில் பக்ஷிகளுக்குத்தான் உறக்கம் உண்டோ! என்று ஆச்சான் பிள்ளை நாலாயிரப்படி.
அதாவது எம்பெருமானை அணுகுவதற்கு ஏற்ற காலம் விடியற்காலம். அதைத் தெரிவிக்கும் பறவைகள் விடியற் காலையில் கண்ணுறங்காமல் விழித்துக் கொண்டிருப்பது, அவையும் ஸ்ரீ ஆண்டாளைப்போல் உறங்காமல் இருக்கின்றன என்றபடி
- வானமாமலை பத்மனாபன்