இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-ஆவது டி20 போட்டி நேற்று மொகாலியில் நடைபெற்றது. ஏற்கெனவே முதல் போட்டி மழையால் கைவிடப் பட்ட நிலையில், இந்தப் போட்டி பெரும் எதிர்பார்ப்பில் இருந்தது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார். தென்ஆப்பிரிக்கா அணியின் ஹென்ரிக்ஸ், டி காக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஹென்ரிக்ஸ் 6 ரன்னில் ஆட்டமிழக்க, அடுத்து அறிமுக வீரர் பவுமா களமிறங்கினார்.
டி காக்குடன் இணைந்து பொறுப்பாக ஆடினார். டி காக் அரை சதமடித்து 52 ரன்னில் ஆட்டமிழந்தார். பவுமா 49 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்கள் ஓரளவு ரன் எடுக்க, 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுக்கு 149 ரன்கள் சேர்த்தது தென் ஆப்பிரிக்கா அணி.
பின்னர் 150 ரன்களைவெற்றி இலக்காகக் கொண்டு களம் இறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 12 ரன்னில் வெளியேறினார். ஷிகர் தவான் 40 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய ரிஷப் பந்த் 5 ரன்னில் ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் கேப்டன் விராட் கோலி நிலைத்து நின்று அதிரடியாக ஆடி 52 பந்துகளில் 3 சிக்சர், 4 பவுண்டரிகளுடன் 72 ரன் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில், இந்திய அணி 19 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.