தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான 3 வது டெஸ்ட் போட்டியை வென்றது இந்தியா. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்று இந்தியா அணி சாதனை படைத்துள்ளது. 3வது டெஸ்ட் போட்டியை, 202 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தியது.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான 3-ஆவது டெஸ்ட் ஆட்டம் ராஞ்சியில் சனிக்கிழமை தொடங்கி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதை அடுத்து களமிறங்கிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்புக்கு 497 ரன்கள் எடுத்து, டிக்ளேர் செய்தது. தொடக்க வீரர் ரோஹித் ஷர்மா இரட்டைச் சதம் விளாசி அசத்தினார். அவர் மொத்தம் 255பந்துகளில் 28 பவுண்டரி, 6 சிக்ஸர்களுடன் 212 ரன் குவித்தார்.
அஜிங்க்ய ரஹானே, 192 பந்துகளில் 17 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 115 ரன் எடுத்தார். தென் ஆப்பிரிக்காவின் லிண்டே 4 விக்கெட்டுகளையும், ரபாடா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதை அடுத்து தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 3-ஆம் நாளில் 162 ரன்களில் ஆட்டம் இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஹம்ஸா 62 ரன்களும், லிண்டே 37 மற்றும் பவுமா 32 ரன்கள் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகள் எடுத்தார். அறிமுக வீரர் நதீம், ஷமி மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்திய அணியை விட 335 ரன்கள் பின்தங்கிய நிலையில், முதல் இன்னிங்க்ஸில் ஆட்டம் இழந்ததால், தென் ஆப்பிரிக்க அணி ஃபாலோ ஆன் பெற்று 2-ஆவது இன்னிங்ஸை தொடர்ந்து விளையாடியது.
4-ஆம் நாள் ஆட்டத்தில் 2-ஆவது இன்னிங்ஸிலும் 133 ரன்களில் அந்த அணி ஆட்டம் இழந்தது. ஷமி 3 விக்கெட்டுகளை எடுத்தார். உமேஷ் யாதவ், நதீம் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஜடேஜா மற்றும் அஸ்வின் தலா 1 விக்கெட்டைக் கைப்பற்றினர்.
இதையடுத்து ஒரு இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் டெஸ்ட் தொடரை 3-0 என கைப்பற்றி, தென் ஆப்பிரிக்காவை ஒயிட் வாஷ் செய்தது.