நியுசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றது. 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 5 போட்டிகள் தொடரில் 2-0 என முன்னிலையில் உள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ‘டி-20’ போட்டியில் ராகுல், ஸ்ரேயாஸ் அசத்தலாக விளையாட இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி ஐந்து ‘டி-20’ போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி ஆக்லாந்தில் ஜன.26 நடைபெற்றது.
இந்தப் போட்டியில், ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்ஸன் பேட்டிங் தேர்வு செய்தார். இரு அணிகளிலும் மாற்றம் செய்யப்படவில்லை.
நியூசிலாந்து அணிக்கு குப்டில், மன்றோ நல்ல தொடக்கம் தந்தனர். குப்டில் (33) ரன்னிலும் மன்றோ (26) ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். ஜடேஜா பந்து வீச்சில் கேப்டன் வில்லியம்ஸன் (14), கிராண்ட்ஹோம் (3) ஆட்டம் இழக்க ரன் விகிதம் தடைப்பட்டது. டெய்லர், செய்பெர்ட் இணைந்து ஒன்ரு இரண்டு ரன்களாக சேர்த்தனர். டெய்லர் (18) ரன்னில் ஆட்டம் இழக்க, நியூசிலாந்து அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 132 ரன் எடுத்தது.
நெருக்கடி இல்லாத எளிய இலக்கு என்ற நிலையில் களம் இறங்கிய ரோகித் சர்மா (8), கேப்டன் கோலி (11) இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினர். பின்னர் லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் இணைந்து சிறப்பாக விளையாடினர். ஸ்ரேயாஸ் 44 ரன் எடுத்தார். ராகுல் 57 ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இந்திய அணி 17.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 135 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
இதை அடுத்து இந்திய அணி 2-0 என 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் முன்னிலை பெற்றது. மூன்றாவது போட்டி வரும் 29ஆம் தேதி ஹாமில்டனில் நடைபெறுகிறது.