இந்தியாவில் கொரோனோ நோய்த் தொற்று பரவல் காரணமாக விளையாட்டுப் போட்டிகள் நடத்த தடை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (யுஏஇ) இந்த முறை ஐபிஎல் போட்டிகள் நடத்தப் படுகின்றன. இதற்காக அணி வீரர்கள் எமிரேட்ஸ் சென்று பயிற்சியில் ஈடுபட்டனர். இதனிடையே அணி வீரர்கள் சிலருக்கு கோவிட் 19 தொற்று கண்டறியப் பட்டதை அடுத்து அவர்கள் போட்டியில் இருந்து வெளியேறினர்.
இந்நிலையில், ஐபிஎல் சீசன் 13 முதல் போட்டி, அபுதாபி நகரில் நடைபெற்றது. இதில், சென்னை, மும்பை அணிகள் மோதின. இந்த முதல் போட்டியில், சென்னை அணி 19.2 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்து, மும்பை அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கொண்டது.
இந்த முதல் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி, முதலில் பந்து வீசத் தீர்மானித்தார். இதைஅடுத்து களம் இறங்கிய மும்பை அணியில், சௌரப் திவாரி 31 பந்துகளில் 42 ரன்னும், டி காக் 20 பந்துகளில் 33 ரன்னும் எடுத்து கை கொடுத்தனர். போலார்ட் 18, சூர்யகுமார் 17 ரன் எடுக்க, மும்பை அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. சென்னை அணி சார்பில் லுங்கிடி 3, ஜடேஜா, தீபக் சகார் தலா 2, சாம் கரான், பியுஸ் சாவ்லா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
163 ரன் என்ற இலக்குடன் களத்தில் இறங்கிய சென்னை அணியில், தொடக்க வீரர்கள் வாட்சன் (4), முரளி விஜய் (1) இருவருமே எல்பிடபிள்யு முறையில் ஆட்டம் இழந்து வெளியேறினர். அடுத்தடுத்து இரு தொடக்க விக்கெட்டுகள் இழந்த போதிலும், அபாரமாக ஆடிய அம்பதி ராயுடு 48 பந்தில் 71 ரன் எடுத்தும், டுபிளசி 44 பந்தில் 58 எடுத்து ஆட்டமிழக்காமலும், சென்னை அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். இறுதியில் சென்னை அணி 19.2 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது! இதை அடுத்து, முதல் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.