கால்பந்து என்றாலே ரசிகர்களுக்கு நினைவுக்கு வருபவர் அர்ஜென்டினாவின் முன்னாள் வீரர் மாரடோனா. கால்பந்து விளையாட்டில் ஜாம்பவானாகத் திகழ்ந்த மாரடோனா மாரடைப்பால் நவ.25 அன்று காலமானார். அவரது மறைவுக்கு பாரதப் பிரதமர் மோடி இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
அர்ஜென்டினா கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் மரடோனா 1977முதல் 1994 வரை சர்வதேச கால்பந்து அரங்கில் கோலோச்சியவர். தனது வேகம் மற்றும் விவேகம் நிறைந்த நளினமான ஆட்டத்தால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களைப் பெற்றவர்.
1986-ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணியின் கேப்டனாக இருந்த மரடோனா உலக கால்பந்து அரங்கில் பிரேசில் நாயகன் பீலேவுக்கு நிகராக பார்க்கப்பட்டவர்.
4 உலகக் கோப்பை போட்டிகளில் (1982, 1986, 1990, 1994) பங்கேற்ற மாரடோனா, அர்ஜென்டினா அணிக்காக 91 சர்வதேச போட்டிகளில் விளையாடி 34 கோல்கள் அடித்துள்ளார்.
பார்சிலோனா, நபோலி, செவில்லா உள்ளிட்ட கிளப் அணிகளுக்காக களம் கண்டு இருக்கும் அவர் மொத்தம் 491 கிளப் போட்டிகளில் ஆடி 259 கோல்கள் அடித்து இருக்கிறார்.
ஓய்வுக்குப் பின்னர் அர்ஜென்டினா உள்பட பல்வேறு அணிகளின் பயிற்சியாளராக பணியாற்றினார். இந்நிலையில் 60 வயதான மாரடோனாவுக்கு கடந்த 2-ஆம் தேதி மூளையில் ரத்த உறைவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதை அடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஒரு வார சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார் மாரடோனா. இந்நிலையில் நேற்று, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிர் பிரிந்தது.
மாரடோனாவின் திடீர் மறைவு, உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. அவரது மறைவுக்காக, அர்ஜென்டினாவில் 3 நாள் தேசிய துக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது. பலரும் மரடோனா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மாரடோனா மறைந்தது வருத்தம் அளிப்பதாக பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மாரடோனா தனது வாழ்நாள் முழுவதும் கால்பந்து களத்தில் சிறந்த விளையாட்டு தருணங்களை நமக்கு அளித்துள்ளார்! அவரது அகால மறைவு நம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது ஆத்மா சாந்தி அடையட்டும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.