இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியை இந்தியா 317 ரன்கள் வித்தியாசத்தில் வென்று சாதனை படைத்தது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் தற்போது சமனில் உள்ளது. சென்னையில் நடைபெற்ற இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் அஸ்வின் நூறு ரன்கள் கடந்து, 8 விக்கெட் கைப்பற்றி, இந்திய அணியின் வெற்றிக்குக் காரணமாக இருந்தார். அவருக்கு ரசிகர்கள் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்.
இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்தி சாதனை நிகழ்த்திய அஸ்வின், டெஸ்ட் போட்டிகளில் 29 வது முறையாக 5 விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் சதம் விளாசினார். இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் தனது 5-வது சதத்தை பதிவு செய்தார். சொந்த மண்ணில் அவர் நூறு ரன்கள் எடுப்பது இதுவே முதல் முறை என்பதால், சென்னை ரசிகர்கள் அவரது சதத்தைக் கொண்டாடினர்.
இங்கிலாந்து அணிக்கு எதிராக முதல் சதத்தை பதிவு செய்தார் அஸ்வின். மேலும் ஒரே போட்டியில் 5 விக்கெட் மற்றும் சதம் விளாசுவது இது மூன்றாவது முறை.
இரண்டாவது டெஸ்ட் போட்டியை இந்தியா வெல்வதற்கு முக்கியக் காரணமாக இருந்த அஸ்வின் 2 இன்னிங்ஸிலும் சேர்த்து 119 ரன்கள் மற்றும் 8 விக்கெட்டை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதும் பெற்றார்.
இந்த நிலையில் தன்னை ஒரு ஹீரோவாக உணர வைத்த சென்னை ரசிகர்களுக்கு நன்றி என்று தனது டுவிட்டர் பதிவில் நன்றி தெரிவித்துள்ளார் அஸ்வின்.
“ நான் இப்போது எப்படி உணர்கிறேன் என்பதை என்னால் வெளிப்படுத்த முடியவில்லை. கடந்த சில நாட்களாக என்னை உற்சாகப் படுத்திய அனைவருக்கும் நான் மிகவும் நன்றி உள்ளவனாக இருக்கிறேன். என்னை ஒரு ஹீரோவாக உணரவைத்த சென்னை ரசிகர்களுக்கு நன்றி” என்று அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதனிடையே, அவரது கருத்துக்கு ரசிகர்கள் பலரும் பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர். இங்கிலாந்து பேட்டிங்கில், அஸ்வின் பந்துவீசச் சென்ற போது, அவரை உற்சாகப் படுத்தும் விதமாக, வேற லெவல் வேற லெவல் அஸ்வின் என்று விராட் கோலி உற்சாகப் படுத்துவதும், அதனை அப்படியே திருப்பிச் சொல்லி ரிஷப் பந்த் ஊக்கப்படுத்துவதும் இப்போது வைரலாகி வருகிறது.
மேலும், மாஸ்டர் ஸ்ட்ரோக்காக மைதானத்தில் அஸ்வின் நடனம் ஆடும் வீடியோவும் டிவிட்டர் பதிவுகளில் அதிகம் பகிரப் பட்டது.