இங்கிலாந்துக்கு எதிரான 2வது டி-20 போட்டியில் அறிமுக வீரர் இஷான் கிஷான், கேப்டன் விராட் கோலி அரைசதங்களை அடித்து விளாச இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட ‘டி-20’ தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்து அணி இரண்டாவது போட்டியையும் வெல்லும் முனைப்புடன் களம் இறங்கியது
இரண்டாவது டி 20 போட்டி, ஆமதாபாத்தில் உள்ள உலகின் மிகப் பெரிய மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்திய அணியில் ஷிகர் தவான், அக்சர் படேல் ஆகியோருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ், இஷாந்த் கிஷான் ஆகியோர் அறிமுகமாகினர். டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலில் பந்துவீச தீர்மானித்தார்.
பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியில், டேவிட் மாலன் (24), ஜேசன் ராய் (46), ஜானி பேர்ஸ்டோவ் (20), கேப்டன் இயான் மார்கன் (28), பென் ஸ்டோக்ஸ் (24) ஆகியோர் ரன் சேர்த்தனர். 20 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுக்கு 164 ரன் எடுத்து 165 ரன் என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்தது.
பின்னர் பேட் செய்யத் தொடங்கிய இந்திய அணியில் லோகேஷ் ராகுல் டக் அவுட் ஆனார். அபாரமாக ஆடிய அறிமுக வீரர் இஷான் கிஷான் 32 பந்தில் 4 சிக்சர் 5 பவுண்டரி உட்பட 56 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். ரிஷாப் பன்ட் 26 ரன் குவித்தார். கேப்டன் விராட் கோலி அதிரடி காட்டி, 49 பந்துகளில் 3 சிக்ஸர் 5 பவுண்டரிகளுடன் 73 ரன் எடுத்து வெற்றிக்கு வழி வகுத்தார்.
இதை அடுத்து டி20 தொடரில் 1-1 என இரு அணிகளும் சமநிலை பெற்றது.