|– முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன் –|
யூரோ கோப்பை கால்பந்து போட்டிகள் 2021
நண்பர்களே, நேற்று யூரோ 2020 கால்பந்து போட்டிகள் தொடங்கின. என்னடா 2021இல் நடக்கின்ற போட்டியை 2020 போட்டி என்று சொல்கிறானே என நினைக்க வேண்டாம். போன ஆண்டு நடக்கவிருந்த கால்பந்து ஆட்டங்கள் கொரொனா காரணமாக இந்து ஆண்டு நடக்கின்றன.
நான்காண்டுகளுக்கு ஒரு முறை நடக்கின்ற போட்டி இது. பிரான்சு, ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், சோவியத் யூனியன் ஆகியவை இந்தப் போட்டியில் ஆதிக்கம் செலுத்தியுள்ளன. ஐரோப்பிய நாடுகளின் கால்பந்து விளையாட்டுச் சங்கங்கள் இணைந்து நடத்தும் போட்டியிது. சென்ற முறை 2016இல் போர்ச்சுகல் பிரன்சை தோற்கடித்து, முதன் முறையாக கோப்பையை வென்றது.
இம்முறை போட்டிகள் 11 நாடுகளில் நடைபெற உள்ளன. முதல் போட்டி துருக்கி-இத்தாலி இடையே இந்திய நேரப்படி நேற்று (11.06.2021) நள்ளிரவு 1230 மணிக்கு ரோம் நகரில் நடைபெற்றது. துருக்கி அணியைக் காட்டிலும் இத்தாலி அணி பலம் வாய்ந்தது.
தனக்குத்தானே ஆப்பு
போட்டி தொடங்கியதிலிருந்தே துருக்கி அணி தற்காப்பாக ஆடிக் கொண்டிருந்தது. இத்தாலிய அணிப்பகுதியில் ஏறி ஆடவில்லை. இதில் முதல் கோல் துருக்கி அணி வீரரே இத்தாலிக்காகப் போட்டுக்கொடுத்தார்.
இத்தாலிய வீரர் அடித்த பந்தை மெரி டெமிரால் என்ற துருக்கிய வீரர் தடுத்தபோது, பந்து கோனம் மாறி கோலில் போய் விழுந்தது. ஆட்ட்த்தின் 53ஆவது நிமிடத்தில், இரண்டாம் பாதியில் இது நிகழ்ந்தது. ஆட்ட்த்தின் 66ஆவது நிமிடத்தில் இத்தாலியின் சிர்ரோ இம்மொபைல், 76ஆவது நிமிடத்தில் லெரென்சோ இசைனி தலா ஒரு கோல் போட்டார்கள். இவ்வாறாக இத்தாலி 3-0 என்ற கோல் கணக்கில் துருக்கி அணியை வென்றது.
ஆட்ட நேரத்தில் துருக்கி அணி மூன்று முறைதான் இத்தாலியின் கோல் வரை போனது. ஆனால் இத்தாலி அணி 24 முறை கோல் அடிக்க முயன்றது. இதில் துருக்கி அணியின் இரண்டு வீரர்களுக்கு மஞ்சள் அட்டை தண்டனை கொடுக்கப்பட்டது.
துருக்கி அணி தனக்குத்தானே கோல் போட்டதால் இந்த ஆட்டம் சிறப்பு பெற்றது. இன்று மாலை 0630 மணிக்கு அடுத்த போட்டி வேல்ஸ்-சுவிட்சர்லாந்து இடையே அசர்பைஜான் நாட்டில் பாகு நக்ரில் உள்ள ஒலிம்பிக் மைதானத்தில் நடைபெறுகிறது.