ஐ.பி.எல் 2021 – இரண்டாம் கட்டம் – 32ஆவது ஆட்டம் – ராஜஸ்தான் vs பஞ்சாப்
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
முதல் பந்திலிருந்து கடைசி பந்து வரை இரு அணிகளும் போராடிய ஆட்டம். முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி ஒரு ஓவருக்கு 9.25 ரன் வீதம் அடித்து மொத்தம் 185 ரன்கள் அடித்து அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது. 16.3 ஓவர்கள் நிலையில் ஐந்து விக்கட் இழப்பிற்கு 166 ரன்.
அதன் பின்னர் மூன்று ஓவர் மூன்று பந்துகளில் அதாவது 21 பந்துகளில் மீதமுள்ள ஐந்து விக்கட்டுகளை இழந்து 19 ரன்கள் மட்டுமே அந்த அணியால் எடுக்க முடிந்தது.
பஞ்சாப் அணியின் அர்ஷதீப் சிங் ஐந்து விக்கட்டுகள் எடுத்தார். முகம்மது ஷமி மூன்று விக்கட்டுகள் எடுத்தார். பஞ்சாப் அணியில் கிரிஸ் கெயில் விளையாடவில்லை. அவருக்கு அவரது 42ஆவது பிறந்த நாளில் ஓய்வு கொடுத்துவிட்டார்கள்.
தொடக்க ஆட்டக்காரர்கள் கே.எல். ராகுலும் (49) மாயங்க் அகர்வாலும் (67) நல்ல தொடக்கம் கொடுத்தார்கள். ஆனால் நல்ல நிலையில் அணியின் ஸ்கோர் இருக்கும்போது இருவரும் அவுட் ஆனார்கள். ராகுல் 11.5ஆவது ஓவரில், அகர்வால் 12.6ஆவது ஓவரில்.
அடுத்து வந்த நிக்கோலஸ் பூரனும் ஐடென் மெர்க்ராமும் சுமாராக விளையாடிக்கொண்டிருந்தார்கள். அப்போது ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சங், ‘ரியான் பாராகை’ பந்து வீசச்சொன்னார்.
அவர் ஒரு ஓவரில் 16 ரன்களை அள்ளிக் கொடுத்தார். கடைசி இரண்டு ஓவர்களில் எட்டு ரன் எடுக்கவேண்டும். அப்போது பஞ்சாப் அணியினர் இதற்கு முன்னர் ஆடிய ஆட்டங்களில் சொதப்பியது போல சொதப்பினார்கள். கடைசி ஓவரில் நான்கு ரன் அடிக்க வேண்டும்.
அப்போது பூரன் 32 ரன்; மெர்க்ராம் 25 ரன். முதல் பந்து நோ ரன்; இரண்டாவது பந்தில் ஒரு ரன்; மூன்றாவது பந்தில் பூரன் அவுட்டானார். தீபக் ஹூடா அடுத்த பேட்ஸ்மென். அவரால் நான்காவது பந்தில் ரன் எடுக்க முடியவில்லை; ஐந்தாவது பந்தில் அவர் அவுட்டானார்.
ஆறாவது பந்தில் ரன் எடுக்க முடியவில்லை. பஞ்சாப் அணி இருபது ஓவர்கள் முடிவில் ஐந்து விக்கட்டுகள் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்து தோல்வியச் சந்தித்தது.
நெவில்லி கார்டஸ் சொன்னது போல – கிரிக்கெட் என்பது போரடிக்கின்ற மற்றும் சுறுசுறுப்பான, பரபரப்பான மற்றும் தூங்கவைக்கின்ற கூறுகளின் கலவையாகும். ஒரு நெருக்கடியான தருணத்தை இழக்க நேரிடும் என்ற பயத்தில் நீங்கள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து உங்கள் கண்களை எடுக்க முடியாது.
Cricket is a capricious blend of elements, static and dynamic, sensational and somnolent. You can never take your eyes away from a cricket match for fear of missing a crisis. – Neville Cardus