ஐ.பி.எல் 2021 – இரண்டாம் கட்டம் – 36ஆவது ஆட்டம் – டெல்லி கேபிடல்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ்
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
நேற்று சனிக்கிழமை. எனவே இரண்டு ஆட்டங்கள். முதல் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ்க்கும் ராஜஸ்தான் ராயல்ஸ்க்கும் இடையே அபுதாபியில் நடந்தது. பூவா தலையா வென்ற ராஜஸ்தான் டெல்லி அணியை பேட்டிங் செய்யச்சொன்னது. ராஜஸ்தான் அணியின் திறமையான பந்து வீச்சினால் டெல்லி அணி 20 ஓவரில் 154 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. ஷ்ரயாஸ் ஐயர் (43), ரிஷப் பந்த் (24), ஹெட்மியர் (28) ரன்கள் எடுத்தனர்.
ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்ய வந்தபோது, அவ்வணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்னுக்கு அவுட்டானார்கள். அணித்தலைவர் சஞ்சு சாம்சன் பாவம் அதிர்ஷ்டமில்லாதவர். இரண்டாவது ஓவரில் விளையாட வந்து, கடைசி வரை அவுட்டாகமல் நின்று, 70 ரன் அடித்து அவரால் அவரது அணியை வெற்றிபெற வைக்க முடியவில்லை. அந்த அணி 6 விக்கட் இழப்பிற்கு 121 ரன் எடுத்தது. சஞ்சு சாம்சன் 70 ரன்; பாக்கியுள்ளவர்கள் 41 ரன்.
ஆட்ட முடிவில் டெல்லி அணி 16 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு வந்தது. அநேகமாக டெல்லி அணி அரையிறுதிக்குச் செல்லும்.
இரண்டாவது ஆட்டம்
இது பஞ்சாபிற்கும் சன்ரைசர்ஸ் அணிக்கும் இடையே ஷார்ஜாவில் நடைபெற்றது. பூவா தலையா வென்ற சன்ரைசர்ஸ் அணி பஞ்சாப் அணியை பேட்டிங் செய்யச் சொன்னது.
பஞ்சாப் 20 ஓவர்களில் ஏழு விக்கட் இழப்பிற்கு 125 ரன் எடுத்தது. ஜேசன் ஹோல்டர் மூன்று விக்கட் எடுத்தார். இவ்வளவு சிறிய ஸ்கோரை சன்ரைசர்ஸ் அணி எளிதில் எடுத்துவிடும் என்று அனைவரும் நினைத்தபோது அந்த அணி 120 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. டேவிட் வார்னர் (2), கேன் வில்லியம்ஸ் (1) போன்ற மாபெரும் வீரர்கள் சொற்ப ரன்னுக்கு அவுட்டாகினர்.
விருத்திமான் சாஹா 37 பந்துகளில் 31 ரன் அடித்தார். ஜேசன் ஹோல்டர் தடாலடியாக ஆடி 47 ரன் அடித்தார். பஞ்சாபின் பவுலர்கள் கஞ்சத்தனமாக பந்து வீசினர். ஷமி 4 ஓவர் 14 ரன்; அர்ஷதீப் 4 ஓவர், 22 ரன்; எல்லிஸ் 4 ஓவர் 32 ரன்; ஹர்ப்ரீத் 4 ஓவர் 25 ரன்; ரவி 4 ஓவர் 24 ரன்; என அனைவரின் எகானமி ரேட் மிகக் குறைவாக இருந்தது.
சன்ரைசர்ஸ் அணி இதுவரை 9 போட்டிகள் விளையாடி 2 புள்ளிகள் மட்டுமே எடுத்துள்ளது. இனி வருகின்ற போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெற்றாலும் அரையிறுதியில் இடம்பெறுவது கடினமே. எனவே சன்ரைசர்ஸ் அணி போட்டியிலிருந்து வெளியேறிவிட்டது எனலாம்.