ஐபிஎல் 2022 – சென்னை vs லக்னோ
– K.V. பாலசுப்பிரமணியன் –
மும்பையின் ப்ராபோர்ன் கிரிக்கட் மைதானத்தில் நடந்த ஏழாவது ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும் லக்னோ அணியும் இன்று விளையாடின. டாஸ் வென்ற லக்னோ அணியின் தலைவர் கே.எல். ராகுல் சென்னை அணியை மட்டையாடச் சொன்னார்.
சென்னை அணியின் தொடக்க வீரர் ராபின் உத்தப்பா 27 பந்துகளில் 50 ரன் அடித்து நல்ல தொடக்கத்தைத் தந்தார். ருதுராஜ் கெய்க்வாட் இந்த ஆட்டத்திலும் சோபிக்கவில்லை. ஆனால் மொயின் அலி (22 பந்துகளில் 35 ரன்), ஷிவம் துபே (30 பந்துகளில் 49 ரன்), அம்பாடி ராயுடு (20 பந்துகளில் 27 ரன்) என அதிரடியாக விளையாடினர். இறுதியாக 20 ஓவர் முடிவில் சென்னை அணி ஏழு விக்கட் இழப்பிற்கு 210 ரன் எடுத்தது.
இந்த மிகப் பெரிய இலக்கை எட்ட, லக்னோ அணி சிறப்பாக ஆட்டத்தைத் தொடங்கியது. ராகுல் (40 ரன்) டி காக் (61 ரன்) நன்றாக ஆடி ரன் ரேட்டை 10 ரன்னுக்கு அருகில் இருக்குமாறு பார்த்துக்கொண்டனர். இருந்தாலும் கூட வெற்றி வாய்ப்பு சென்னை அணிக்கு அதிகமாகத் தான் இருந்தது.
ஆனால் 19ஆவது ஓவரை வீச ஷிவம் துபேயை ரவீந்தர் ஜதேஜா அழைத்தார். அவர் வீசிய அந்த ஒரு ஓவர் ஆட்டத்தை தலைகீழாக்கியது. அவரது ஓவரின் முதலாவது பந்து பதோனியால் சிக்சருக்கு அனுப்பப்பட்டது.
அடுத்த இரண்டு பந்துகளையும் வைட் பாலாக வீசினார். கடைசி மூன்று பந்துகள் 4, 4, 6 எனப் பறந்தன. கடைசி ஓவரிலும் பதோனி ஒரு சிக்ஸ் அடித்தார். இப்படியாக 19.3 ஓவரில் 211 ரன் எடுத்து லக்னௌ அணி வெற்றி பெற்றது.
இன்று (1 ஏப்ரல் 2022) நடக்கவிருக்கும் ஆட்டத்தில் கொல்கொத்தாவும் பஞ்சாபும் விளையாடவுள்ளன.