ஐ.பி.எல்: – சென்னை vs ராஜஸ்தான்
- K.V. பாலசுப்பிரமணியன்
நேற்று, ஐபிஎல்லின் 68ஆவது ஆட்டம் மும்பை ப்ராபோர்ன் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையே நடந்தது. சென்னை அணியை (150/6, மொயின் அலி 93, தோனி 26, சாஹல் 2/26, மெகாய் 2/20) ராஜஸ்தான் அணி (151/5, ஜெய்ஸ்வால் 59, அஷ்வின் 40, பிரஷாந்த் சொலங்கி 2/20) 5 விக்கட் வித்தியாசத்தில் வென்றது.
டாஸ் வென்ற சென்னை அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. தொடக்க வீர்ர் ருதுராஜ் கெய்க்வாட் முதல் ஓவரில், கடைசி பந்தில் இரண்டு ரன்னுக்கு ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான கான்வேயுடன் மொயின் அலி இணைந்தார். நான்காவது ஓவரில் மொயின் அலி மூன்று ஃபோர், ஒரு சிக்சர் அடித்தார். அஷ்வின் வீசிய ஐந்தாவது ஓவரில் இரண்டு ஃபோர், ஒரு சிக்சர் அடித்தார்.
ஆறாவது ஓவரை ட்ரெண்ட் போல்ட் வீசினார்; அந்த ஓவரில் மொயின் அலி ஒரு சிக்சர், ஐந்து ஃபோர் அடித்தார். எனவே பவர்ப்ளே முடிவில் சென்னை அணி ஒரு விக்கட் இழப்பிற்கு 75 ரன் எடுத்திருந்தது. இந்த வேகத்திற்கு சென்னை அணி ஆடியிருந்தால் 20 ஓவரில் 250 ரன் எடுத்திருக்க வேண்டும். ஆனால் ராஜஸ்தான் பந்து வீச்சாளர்கள் திறமையாகப் பந்து வீசினார்கள்.
கான்வே (16 ரன்), ஜெகதீசன் (1 ரன்), அம்பாடி ராயடு (3 ரன்) ஆகியோர் அடுத்தடுத்து வேகமாக ஆட்டமிழந்தனர். அம்பாடி ராயடு ஆட்டமிழந்த பின்னர் மூன்று ஃபோர் மற்றும் ஒரு சிக்சர் மட்டுமே அடிக்கப்பட்டது. இதனால் சென்னை அணி 20 ஓவர் முடிவில் ஆறு விக்கட் இழப்பிற்கு 150 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது.
அதன் பின்னர் ஆடவந்த ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர், அதிரடி ஆட்டக்காரர், இந்த ஐபிஎல்லில் இதுவரை அதிக ரன் அடித்துள்ள ஜாஸ் பட்லர் இரண்டாவது ஓவரில் ஆட்டமிழந்தார்.
அதன் பின்னர் வந்த வீரகள் சஞ்சு சாம்சன் (20 பந்துகளில் 15 ரன்), படிக்கல் (9 பந்துகளில் 3 ரன்), ஹெட்மயர் (ஆறுபந்துகளில் 7 ரன்) சரியாக விளையாடவில்லை. படிக்கல் ஆட்டமிழந்தபோது அஷ்வின் விளையாட வந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 76/3.
அதற்கடுத்து ஜெய்ஸ்வால் அவுட்டாகும்போது அணியின் ஸ்கோர் 104/4; ஹெட்மயர் ஆட்டமிழக்கும்போது அணியின் ஸ்கோர் 112/5.
அஷ்வின் அப்போது 21 ரன் அடித்திருந்தார். அந்த நிலையில் இருந்து பொறுப்புடன் விளையாடி, 40 ரன் அடித்து, அஷ்வின் ராஜஸ்தான் அணிக்கு வெற்றி தேடித்தந்தார்.
அவர் ஆட்ட நாயகனாகவும் அறிவிக்கப்பட்டார். சென்னை அணியை 150 ரன்களுக்குள் சுருட்டியபோதே ராஜஸ்தான் அணி தகுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றுவிட்டது. இறுதியாக வெற்றிபெற்ற பின்னர் இரண்டாம் இடத்திற்கு வந்துவிட்டது.
மூன்றாம் இடம் லக்னோ அணிக்கு. நான்காம் இடம் யாருக்கு என்பதை நாளை நடைபெற உள்ள மும்பை, டெல்லி அணி மேட்ச் தீர்மானிக்கும்.
டெல்லி அணி வெற்றி பெற்றால் அது தகுதி பெறும். தோல்வியுற்றால் பெங்களூரு அணி தகுதிபெறும். ராஜஸ்தான் அணி முதல் தகுதி ஆட்டத்தில் குஜராத் அணியை எதிர்த்து விளையாடும்.