44ஆவது செஸ் ஒலிம்பியாட் – பூஞ்சேரி, மாமல்லபுரம்
ஒன்பதாவது சுற்று – 07.08.2022
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
இந்தியா A ஆண்கள் அணி இன்று ஒன்பதாவது சுற்றில் பிரேசில் அணியோடு விளையாடி 3-1 என்ற கணக்கில் வென்றது. எரிகைசி அர்ஜுன், சசிகிரண் இருவரும் தத்தம் ஆட்டங்களை வென்றனர். ஹரிகிருஷ்ணா, விதித் குஜராதி இருவரும் தங்களது ஆட்டங்களைச் சமன் செய்து தலா அரைப் புள்ளி பெற்றனர்.
இந்தியா B ஆண்கள் அணி இன்று அசர்பைஜான் அணியுடன் விளையாடி 2-2 என்ற கணக்கில் போட்டியைச் சமன் செய்தது. பிரக்ஞானந்தா வெற்றிபெற்றார்; குஹேஷ் இன்று தனது ஆட்டத்தை ட்ரா செய்தார். இந்த ஒலிம்பியாடில் எட்டு வெற்றிகளுக்குப் பின்னர் குஹேஷ் செய்யும் ட்ரா இது. சரின் நிஹாலும் ட்ரா செய்தார். சாத்வானி ரௌனக் இன்று தோல்வியடைந்தார்.
இந்தியா C ஆண்கள் அணி பராகுவே அணியோடு விளையாடி, 3-1 என்ற கணக்கில் வென்றது. சேதுராமன், கார்த்திக் முரளி, அபிமன்யு ஆகிய மூவரும் வெற்றி பெற்றனர். கங்குலி தோல்வியடைந்தார்.
லதிவியா, ஆஸ்திரியா, கொலம்பியா, வடக்கு மாசிடோனியா, கிர்கிஸ்தான், இலங்கை, காஸ்டாரிகா, கானா ஆகிய நாடுகளின் வீரர்கள் இன்று அனைத்துப் போட்டியிலும் வெற்றிபெற்று நான்கு புள்ளிகள் பெற்றனர்.
இந்தியா A பெண்கள் அணி போலந்து அணியுடன் விளையாடி 1.5-2.5 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வியடைந்தது. இந்திய அணியில் வைஷாலி தோல்வியடைந்தார்; கோனேரு ஹம்பி, ஹரிகா த்ரோணவள்ளி, தானியா சச்சதேவ் ஆகிய மூவரும் ட்ரா செய்து தலா அரைப் புள்ளி பெற்றனர்.
இந்தியா B பெண்கள் அணி சுவிட்சர்லாந்து அணியுடன் விளையாடி 4-0 என்ற புள்ளிக் கணக்கில் வென்றனர். இந்திய அணியின் வந்திகா, பத்மினி, மேரி ஆன் கோம்ஸ், திவ்யா ஆகிய நால்வரும் இன்று வெற்றி பெற்றனர். இந்தியா C பெண்கள் அணி எஸ்தோனியா அணியை 3-1 என்ற புள்ளிக் கணக்கில் தோற்கடித்தது. நந்திதாவும் வர்ஷிணியும் வெற்றி பெற்றனர். ஈஷாவும் விஷ்வாவும் ட்ரா செய்தனர்.
ஆண்கள் பிரிவில் உஸ்பெஸ்கிஸ்தான் அணி 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இந்தியா B அணி 15 புள்ளிகளுடன் இரண்டாமிடத்திலும், இந்தியா A அணி 14 புள்ளிகளுடன் நாலாம் இடத்திலும், இந்தியா C அணி 12 புள்ளிகளுடன் 23ஆவது இடத்திலும் உள்ளன.
பெண்கள் பிரிவில் போலந்து 15 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இந்தியா A அணி 15 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், இந்தியா B அணி 13 புள்ளிகளுடன் 10ஆம் இடத்திலும், இந்தியா C அணி 13 புள்ளிகளுடன் 16ஆவது இடத்திலும் உள்ளன.