ஐ.பி.எல் 2023 – 15ஆம் நாள் – 14.04.2023
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் —
எப்போது இந்த நிலை. ரிங்கூ சிங் பரிதாபம்
ஐ.பி.எல் 2023 தொடரின் 15ஆம் நாளான நேற்று சன்ரைசர்ஸ் ஹதராபாத் மற்றும் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே கொல்கொத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ஹைதராபாத் அணி வென்றது. ஹைதராபாத் அணி (228/4, ஹாரி ப்ரூக் 10), எய்டன் மர்க்ரம் 50, அபிஷேக் ஷர்மா 32, ரசல் 3/22) கொல்கொத்தா அணியை (205/7, ஜெகதீசன் 36, நிதீஷ் ராணா 75, ரிங்கூ சிங் 58) 23 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணிக்கு அந்த அணியின் தொடக்க வீரரான ஹாரி ப்ரூக் 100* ரன்களும், கேப்டன் மார்கரம் 50 ரன்களும் எடுத்துக் கொடுத்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த ஹைதராபாத் அணி 228 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை அடைய களமிறங்கிய கொல்கொத்தா அணிக்கு குர்பாஸ் ரன் எடுக்காமலும், வெங்கடேஷ் ஐயர் 10 ரன்னிலும் சுனில் நரைன் ரன் எடுக்காமலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் கொடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 20 ரன்களுக்கே மூன்று விக்கெட்டுகளை இழந்தது. ஜெகதீசன் 36 ரன்கள் எடுத்து கொடுத்தார். இதன்பின் களமிறங்கிய ரசல் 3 ரன்னில் வெளியேறினார். இதன்பின் கூட்டணி சேர்ந்த நிதிஷ் ராணா – ரிங்கு சிங் ஜோடி, அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி தேவைக்கு ஏற்ப ரன்னும் சேர்த்தது.
மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிதிஷ் ராணா 41 பந்துகளில் 75 ரன்கள் எடுத்த போது விக்கெட்டை இழந்தார். கடந்த போட்டியில் கொல்கத்தா அணிக்கு மிரட்டல் வெற்றியை பெற்று கொடுத்த ரிங்கு சிங் இறுதி வரை ஆட்டமிழக்காமல் ஆடினார். ஆனால் கடைசி ஓவரில் 32 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை. “கிரிக்கெட்டின் சராசரி விதி” என்ற ஒரு விதி இருப்பதாகச் சொல்வார்கள். அதுபோல ரிங்குசிங் அல்லது வேறு ஏதேனு ஒரு பேட்டர் ஒவ்வொரு முறையும் கடைசி ஓவரில் ஐந்து அல்லது ஆறு சிக்சர் அடிக்க முடியுமா? அவர் அதிரடியாக விளையாடினாலும், இலக்கு மிகப்பெரியது என்பதால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் மட்டுமே எடுத்த கொல்கத்தா அணி, 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஹைதராபாத் அணி சார்பில் அதிகபட்சமாக மாயன்க் மார்கண்டே மற்றும் மார்கோ ஜென்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
ஹைதராபாத் அணியைச் சேர்ந்த, 55 பந்துகளில் 12 ஃபோர், 3 சிக்சர்களுடன் ஆட்டமிழக்காமல் 100 ரன் அடித்த ஹாரி ப்ரூக் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார். அதிரடியாக பேட்டிங் செய்யக்கூடிய ரசலும் நரேனும் இதுவரை சரியாக ஆடாதது கொல்கொத்தா அணிக்கு சிக்கலை ஏற்படுத்துகிறது.