
சாம்பியன்ஸ் ட்ராபி – இந்தியா- ஆஸ்திரேலியா – அரையிறுதி ஆட்டம் – 04.03.2025
இந்திய அணி அபார வெற்றி
முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்
ஆஸ்திரேலிய அணியை (49.3 ஓவர்களில் 264, ஸ்டீவன் ஸ்மித் 73, அலகஸ் கேரி 61, ட்ராவிஸ் ஹெட் 39, முகமது ஷமி 3/48, வருண் 2/49, ஜதேஜா 2/40, அக்சர் படேல் 1/43) இந்திய அணி (48.1 ஓவர்களில் 267/6, விராட் கோலி 84, ஷ்ரேயாஸ் ஐயர் 45, கே.எல்.ராகுல் 42, அக்சர் படேல் 27, ஹிருதிக் பாண்ட்யா 28, ரோஹித் ஷர்மா 28, நாதன் எல்லிச் 2/49, ஆடம் சாம்பா 2/60, பென் த்வாஷ்யிஸ் 1/39, கூப்பர் கான்னோலி 1/37) 4 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
பூவாதலையா வென்ற ஆஸ்திரேலிய அணியின் அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித் முதலில் மட்டையாடத் தீர்மானித்தார். அந்த அணியின் தொடக்க வீரர் கூப்பர் கான்னோலி மூன்றாவது ஓவர் முடிவில் ஷமியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அதன் பின்னர் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ட்ராவிஸ் ஹெட் (33 பந்துகளில் 39 ரன்) மூன்றாவதாகக் களமிறங்கிய அணித்தலைவர் ஸ்மித்துடன் (96 பந்துகளில் 73 ரன்) இணைந்து 50 ரன்கள் சேர்த்து ஒன்பதாவது ஓவரில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் மார்னஸ் லபுசேன் (36 பந்துகளில் 29 ரன்), ஜோஷ் இங்கிலிஷ் (12 பந்துகளில் 11 ரன்) மற்றும் அலக்ஸ் கேரி (57 பந்துகளில் 61 ரன்) ஆகியோர் ஸ்மித்துடன் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
37ஆவது ஓவரில் ஸ்மித் ஆட்டமிழந்தபிறகு ஆஸ்திரேலிய வீரர்களால் அதிரடியாக ரன் குவிக்க முடியவில்லை. அதனால் 49.3 ஓவர்களில் அந்த அணி 264 ரன்கள் எடுத்து அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது.
இந்திய சுழல்பந்து வீச்சாளர்கள் நன்றாகப் பந்து வீசியபோதிலும் அவர்களுக்கு விக்கட் அவ்வளவாக விழவில்லை. ஹார்திக் பாண்ட்யா அதிக ரன் கொடுத்தார்.
அதன் பின்னர் ஆட வந்த இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் ஷர்மா (29 பந்துகளில் 29 ரன்) மற்றும் ஷுப்மன் கில் (11 பந்துகளில் 8 ரன்) பவர்ப்ளே முடிவதற்குள் ஆட்டமிழந்தனர்.
அவர்களைத் தொடர்ந்து விராட் கோலியும் (98 பந்துகளில் 84 ரன்) மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் (62 பந்துகளில் 45 ரன்)நிதானமாக ஆடி ஆட்டத்தை இந்திய அணியின் கட்டுப்பாடிற்குள் கொண்டு வந்தனர். ஒரு கட்டத்தில் இவர்கள் இருவரும் மெதுவாக ஆடுவதால் தோல்விக்கான வாய்ப்பு அதிகரித்து வந்தது. இவர்களுக்குப் பின்னர் ஆடவந்த அக்சர் படேல் (30 பந்துகளில் 27 ரன்) கே.எல். ராகுல் (34 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 42 ரன்) ஹார்திக் பாண்ட்யா (24 பந்துகளில் 28 ரன்) ஆகியோர் சிறப்பாக ஆடி இந்திய அணியைக் கரைசேர்த்தனர்.
46ஆவது ஓவரில் ஹார்திக் பாண்ட்யா அடித்த இரண்டு தொடர் சிக்சர்கள் அணியின் வெற்றியை உறுதிப்படுத்தியது. 48.1 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஆறு விக்கட் இழப்பிற்கு 267 ரன் எடுத்து 4 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுவிட்டது. இரண்டாவது அரையிறுதி ஆட்டம் நியூசிலாந்து தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே நாளை, மார்ச்சு ஐந்தாம் தேதி லாகூரில் நடைபெறும்.
இன்றைய ஆட்டத்தில் ஆட்டநாயகனாக விராட் கோலி அறிவிக்கப்பட்டார்.