நாட்டிங்காம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் குல்தீப் யாதவ் 6 விக்கெட் எடுக்க, ரோஹித் சர்மா சதம் அடிக்க, இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. தொடரின் முதல் ஒரு நாள் போட்டி நாட்டிங்காம் நகரில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பந்து வீசத் தீர்மானித்தார். அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 268 ரன் எடுத்து ஆட்டமிழந்தது.
இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 53, பென் ஸ்டோக்ஸ் 50, ஜாசன் ராய், ஜானி பிரிஸ்டோ இருவரும் தலா 38 ரன் எடுத்தனர். இந்தப் போட்டியிலும் எதிர்பார்த்ததைப் போலவே குல்தீப் யாதவ் அபாரமாக பந்து வீசினார். 10 ஓவர் வீசி 25 ரன் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார் குல்தீப்.
269 ரன் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா, ஷிகார் தவன் வழக்கமான நல்ல துவக்கம் அளித்தனர். தவான் 27 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். கோலி 82 பந்துகளில் 75 ரன் எடுத்தார். ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி தனது 18வது சதத்தை அடித்தார். அவர் 114 பந்துகளில் 15 பவுண்டரி, 4 சிக்ஸர் அடித்து 137 ரன் எடுத்தார்.
இந்திய அணி 40.1 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 269 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதை அடுத்து 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என இந்தியா முன்னிலை பெற்றது.
முன்னதாக, டி-20 போட்டித் தொடரில் 2-1 என இந்தியா வென்றது குறிப்பிடத் தக்கது