இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி சிறந்த கேப்டனாக செயல்படுகிறார் என்று தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தென் ஆப்பிரிக்க அணியின் அதிரடி வீரரான டிவில்லியர்ஸ், வெளிநாடுகளில் நடைபெற்று வரும் டி20 லீக் போட்டிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் அவர் அளித்த பேட்டியில், ஐ.பி.எல் தொடரில் பெங்களூரு அணியில் தன்னுடன் இணைந்து விளையாடிய விராட் கோலியை வெகுவாக பாராட்டியுள்ளார்.
அவர் கூறுகையில், “விராட் கோலியும், நானும் ஐ.பி.எல்-லில் ஒன்றாக விளையாடி இருக்கிறோம். இருவரும் ஒன்றாக பேட்டிங் செய்யும் போது ஒருவித கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிறது. போட்டியை அணுகும் விதத்தில் இரண்டு பேருக்குமே ஒரே மாதிரியான மனநிலை இருக்கிறது. இப்படி ஒரே மனநிலை கொண்ட இரண்டு பேர் புரிந்துகொண்டு விளையாடுவது மகிழ்ச்சியானது. கேப்டன் ஆன பிறகு, கடந்த சில ஆண்டுகளாக தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு விராட் வளர்ந்திருக்கிறார். ஆஸ்திரேலிய தொடரில் இந்திய அணி வெல்ல வாய்ப்பிருக்கிறது’ என தெரிவித்துள்ளார்.