ஆஸ்திரேலியா இந்திய அணிகள் மோதிய 2வது டெஸ்ட் போட்டியில் 146 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி பெர்த்தில் நடைபெற்றது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 326 ரன்கள் எடுத்தது. இந்திய அணி 283 ரன்களில் ஆட்டமிழந்தது. இதனால், 43 ரன்கள் பின் தங்கியது இந்திய அணி.
இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 243 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இதை அடுத்து 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடத் தொடங்கியது. நேற்று நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 112 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இன்று கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது.
ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் விஹாரி ஆட்டமிழக்க, ரிஷப் பந்த் 30 ரன்களில் ஆட்டமிழக்க, கடைசி 4 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து, 140 ரன்களில் இந்திய அணி ஆட்டம் இழந்தது. இதை அடுத்து ஆஸ்திரேலிய அணி 2வது டெஸ்ட் போட்டியில் வென்றது.
இந்த வெற்றியின் மூலம் டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா 1 போட்டியில் வென்று 1க்கு1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. மூன்றாவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் 26ஆம் தேதி தொடங்குகிறது.