ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. இரு அணிகளில் கோப்பை வெல்வது யார் என்பது தெரிந்துவிடும். குறிப்பாக, 4வது முறையாக கோப்பை வென்று அதிகமுறை கோப்பை வென்றவர்கள் பட்டியலில் முதலிடம் பிடிப்பவர் யார் என்பதும் தெரிந்துவிடும்.
ஐபிஎல்., சீசன் 12 தொடர் தற்போது இறுதித் கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் – ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் இறுதிப் போட்டியில் மீண்டும் மோதுகின்றன.
இந்தப் போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30க்கு நடக்கிறது.
இதுவரை நடந்து முடிந்த ஐ.பி.எல் தொடர்களில் மும்பை அணி 4 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறி, 3 முறை கோப்பையை வென்றுள்ளது. அதில், 2 முறை சென்னை அணியை வீழ்த்தி கோப்பை வென்றுள்ளது. சென்னை அணியும் 8 முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறி 3 முறை கோப்பையை வென்றுள்ளது!
சென்னை சூப்பர் கிங்ஸின் பலம் தோனி. துணைக்கு டுபிளெசிஸ், வாட்சன், சுரேஷ் ரெய்னா, ராயுடு என பேட்டிங் பட்டாளம் உள்ளது. ஜடேஜா, ஹர்பஜன்சிங், தாஹிர் என பௌலிங்கில் கலக்கக் காத்திருக்கின்றனர். மும்பை அணியில் ரோஹித் சர்மா பேட்டிங் நாயகன். துணைக்கு டி காக், சூரியகுமார் எனவும், ஹர்திக் பாண்ட்யா, பும்ரா எனவும் ஒரு பட்டாளம் இருக்கிறது.
ஹைதராபாத் ஸ்டேடியம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், இரு அணிகளும் கடுமையாக போராட வேண்டியிருக்கும். இளம் வீரர்களைக் கொண்ட மும்பை அணியும், அனுபவ வீரர்களுடன் களமிறங்கும் சென்னை அணியும் இறுதிப்போட்டியில் மோதுவதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.