புதுதில்லி: ஊக்கமருந்து சர்ச்சை குறித்த செய்தியை மறுத்திருக்கிறார் தடளக வீராங்கனை கோமதி மாரிமுத்து.
தமிழகத்தைச் சேர்ந்த தடகள வீராங்கனை கோமதி மாரிமுத்து அண்மையில் தோகாவில் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீ., ஓட்டத்தில் தங்கம் வென்றார்.
இந்தப் போட்டியின்போது இவரிடம் ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட்டது. இதில் ஸ்டிராய்டு எனும் ஊக்கமருந்தை அவர் பயன்படுத்தியதாக தெரிகிறது. இதை அடுத்து இவர் தற்காலிகமாக ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் கசிந்தன.
கோமதியின் ‘பி’ டெஸ்ட் மாதிரியிலும் ஊக்கமருந்து கலந்திருப்பது தெரிய வந்தால், இவர் நான்கு ஆண்டுகள் போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்படலாம். ஆசிய சாம்பியன்ஷிப்பில் வென்ற பதக்கமும் பறிபோகலாம் என்று கூறப் படுகிறது.
இந்நிலையில், இந்தச் செய்தியை கோமதி மாரிமுத்து மறுத்துள்ளார். இது குறித்து கோமதி மாரிமுத்து கூறுகையில், ஊக்கமருந்து சோதனையில் நான் சிக்கியதாக, பத்திரிகையில் படித்துதான் தெரிந்து கொண்டேன். இந்திய தடகள கூட்டமைப்பிடம் இருந்து அது போன்று எந்தத் தகவலும் எனக்கு வரவில்லை. இது போன்ற தவறான செய்திகள் எங்கிருந்துதான் வருகிறதோ தெரியவில்லை,” என்று கூறினார்.
முன்னதாக நேற்று, வடநாட்டு ஊடகங்களில் வெளியான செய்தியில், தடை செய்யப் பட்ட ஊக்க மருந்தை கோமதி பயன்படுத்தியதற்கான பாசிட்டிவ் முடிவு வந்தது. கோமதி ஆசியக் கோப்பை போட்டிகளுக்குச் செல்வதற்கு முன்னர் ஒரு மாதம் முன்பு, கடந்த மார்ச் மாதம் பாடியாலாவில் நடைபெற்ற பெடரேஷன் கப் போட்டியின் போது, அவருக்கு என்ஏடிஏ என்ற தேசிய ஊக்க மருந்து சோதனை அமைப்பில் எடுக்கப் பட்ட சோதனை முடிவுகளிலும் இது தெரிய வந்ததாகவும், ஆனால் அதனை தங்களிடம் அளித்திருந்தால், ஆசியக் கோப்பை போட்டிகளுக்கு கோமதி சென்றிருப்பது தடுக்கப் பட்டிருக்கும் என்றும் ஏஎஃப்ஐ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
தற்போது கோமதி மாரிமுத்து குறித்த சர்ச்சை பலமாக எழுப்பப் படு வருகிறது.