உலகக் கோப்பை கிரிக்கெட்டில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 352 ரன் எடுத்து 353 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ஆஸ்திரேலியாவுக்கு நிர்ணயித்தது!
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது இன்று லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் 14 ஆவது லீக் போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலிய அணியும் மோதுகின்றன
இதில் டாஸ் வென்று பேட்டிங் செய்யத் தீர்மானித்தது இந்திய அணி. தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியில் துவக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மாவும் ஷிகர் தவானும் நன்றாக அடித்தளம் இட்டனர்.
ரோகித் சர்மா நிதானமாக விளையாடினார். அவர் 70 பந்துகளில் 57 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்! இதில் மூன்று பவுண்டரிகளும் ஒரு சிக்சரும் அடங்கும்.
தொடர்ந்து விராட் கோலி ஷிகர் தவான் உடன் ஜோடி சேர்ந்தார். இந்த இணை ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை நன்றாக எதிர்கொண்டது. ஷிகர் தவான் 117 ரன்கள் குவித்தார். இதில் 16 பவுண்டரிகள் அடங்கும்
விராட் கோலி தன் பங்குக்கு 77 பந்துகளில் 82 ரன் எடுத்தார். இதில் 2 சிக்சர் 4 பவுண்டரிகள் அடங்கும். நடு வரிசையில் வந்த ஹர்திக் பாண்டியா வாண வேடிக்கை காட்டினார். 27 பந்துகளில் 4 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 48 ரன்கள் குவித்தார்
பின்னர் வந்த தோனி லோகேஷ் ராகுல் ஆகியோர் அதிரடி காட்ட இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 352 ரன்கள் எடுத்தது. இதை அடுத்து 353 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களம் இறங்கியுள்ளது.