உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இன்றைய 18 வது லீக் ஆட்டத்தில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப் படும் இந்தப் போட்டி, நாட்டிங்ஹாம் நகரில் நடைபெறுகிறது.
போட்டி நடைபெறும் நாட்டிங்ஹாமில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால், போட்டி நடைபெறுமா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது. நியூசிலாந்து அணி இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும், இந்திய அணி இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளதால் இந்தப் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். அவர்களை எதிர்பார்ப்பை இரு அணிகளும் நிறைவேற்றும் முன், மழை நிறைவேற்றுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் 2019 இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. தற்போது அங்கே மழை பெய்து வருவதால் பல ஆட்டங்கள் பாதிக்கப் பட்டுள்ளன.
கடைசி 7 போட்டிகளில் 3 போட்டிகள் மழையால் கைவிடப்பட்டுள்ளன. நாட்டிங்ஹாமில் உள்ள டிரன்ட்பிரிட்ஜில் இன்று நடைபெறவிருக்கும் இந்தியா, நியூசிலாந்து மோதும் போட்டியைக் காண ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர். ஆனால், நாட்டிங்ஹாமில் நிலவும் வானிலை, கிரிக்கெட் போட்டி நடைபெறுவதற்கு ஏற்ற வகையில் இல்லை.
ஏற்கெனவே மழையால் மூன்று போட்டிகள் கைவிடப்பட்டுள்ளன. இருப்பினும், லீக் ஆட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டால், மற்றொரு நாளில் நடத்த வேண்டும் என ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
நாட்டிங்ஹாமில் இன்று மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப் படுகிறது. இந்திய அணியில் காயம் காரணமாக விலகியுள்ள ஷிகர் தவானுக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் விளையாடுவார் எனத் தெரிகிறது. அதுபோல் தொடக்க ஆட்டக் காரர்களாக ரோஹித் சர்மாவுடன், கே.எல்.ராகுலும் களம் இறங்குவர் என்று தெரிகிறது.