உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியை 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா அணி!
ஜூன் 25 நேற்று நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 32-வது போட்டியில் ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தை 64 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை பிரகாசப் படுத்திக் கொண்டது.
டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசத் தீர்மானித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் கேப்டன் ஃபின்ச், வார்னர் இருவரும் சிறப்பாக ஆடினர். ஃபின்ச் சதம் அடித்தார். வார்னர் 53 ரன் எடுத்தார். ஆஸ்திரேலிய அணி ஒரு கட்டத்தில் 320 ரன் கடக்கும் என்று கணிக்கப்பட்டது. ஆனால் இங்கிலாந்து அணியின் பந்து வீச்சில் ஸ்மித் 38, மேக்ஸ்வெல் 12, உஸ்மான் 23 என வரிசையாக விக்கெட்டுகள் சரிந்ததால், ரன் வேகம் மட்டுப் பட்டது. இதை அடுத்து ஆஸ்திரேலிய அணி, 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 285 ரன் எடுத்தது.
தொடர்ந்து, 286 ரன் என்ற வெற்றி இலக்கை நோக்கி பேட் செய்யத் தொடங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் வின்சி, முதல் ஓவரிலேயே ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அந்த அதிர்ச்சியில் இருந்து மீளாத இங்கிலாந்து அணி, தொடர்ந்து ரூட் 8, மோர்கன் 4 என அடுத்தடுத்த ஆட்டமிழப்புகளால் தடுமாறியது. பென் ஸ்டோக்ஸ் மட்டும் 89 ரன் எடுத்தார். இறுதியில் 44.4 ஓவரில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 221 ரன் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
இந்தப் போட்டியில் ஆரோன் ஃபின்ச் சதம் அடித்து ஆட்டநாயகன் விருது பெற்றார். டேவிட் வார்னர் 500 ரன் கடந்து, ஒரே உலகக்கோப்பையில் 500 ரன் கடந்த மூன்றாவது ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனை படைத்தார்.
இங்கிலாந்து பெற்ற இந்தத் தோல்வியால், வங்கதேச, இலங்கை அணிகளுக்கு அரையிறுதி செல்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.